Wednesday, November 28, 2012

2011: 21 கிராம்


“கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?”

- சுப்ரமணிய பாரதி.



1. வெற்றுக்கால்கள்: வாழ்வின் மறுபக்கம்:
இந்த வருடம் பிப்ரவரி 11ம் தேதியன்று தி ஹிண்டு பத்திரிகையில் ஹர்ஷா மந்திர் எழுதிய “வெற்றுக்கால்கள்: வாழ்வின் மறுபக்கம்” என்ற கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன்.  கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை. அமெரிக்காவில் படித்து, வேலையும் செய்து வந்திருந்த துஷார் மற்றும் மேட் எனும் இரண்டு இந்திய இளைஞர்கள், இந்தியாவின் உண்மையான முகத்தை உணர்ந்து கொள்ள தமது வேலையை விட்டுவிட்டு, கிராமப்பகுதியில் ஒரு மாதம் வாழ்க்கையை நடத்திய அனுபவத்தை பற்றி அந்த கட்டுரை விளக்கியிருந்தது.

இந்த இரண்டு இளைஞர்களும் இந்திய அரசாங்கம் ஏழ்மைக்கோட்டுக்கு நிர்ணயித்திருந்த ஒருநாளைக்கு ரூபாய் 26 மட்டுமே செலவு செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் அந்த பணத்தைக்கொண்டு கண்ணியமான, ஆரோக்கியமாக வாழ்க்கையை வாழமுடியுமா என்று தங்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார்கள். அவர்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்த “அதிகாரப்பூர்வ வறுமை” நிலையை ஒட்டி வாழ்வது மிகக் கடினமாக இருந்திருக்கிறது. அது போன்ற வாழ்க்கையை வாழும் போது நாளெல்லாம் அவர்களுக்கு அடுத்தவேளை உணவை எவ்விதம் உறுதிசெய்வது என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. மாஸ்லோவின் “மனிதத்தேவை பிரமிடை” நிதர்சனமாய் புரிந்துகொள்ள அவர்களுக்கு அந்த அனுபவம் மிகவும் உதவியிருக்கும்.

இயற்கை வழி வேளாண்வாதி மசனாபுவின் கருத்து ஞாபகத்துக்கு வருகிறது. “கொள்கைகள், புள்ளிவிவரங்கள் என்பது படித்த, நகரத்து மக்களுக்கானவை, ஒரு கிராமத்து விவசாயி அப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பமாட்டான். அதற்காக அவன் முட்டாள் எனப் பொருள் அல்ல. ஏனெனில் முட்டாள் விவசாயியாக இருக்க முடியாது. அதற்காக அவனிடம் எந்த தத்துவமமும் இல்லை என்றில்லை. மாறாக அவன் எந்த தத்துவமும் தேவையற்றது என்ற மகத்தான தத்துவத்தை உடையவனாக இருக்கிறான்” என்கிறார். வளர்ச்சிப்பணியில் மக்களை தவிர்த்துவிட்டு, நான்கு அறைகளுக்குள் போடப்படும் கொள்கைகள், புள்ளிவிவரங்கள் வளர்ச்சியை, வீக்கமாக தான் மாற்றுகிறது.

சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகளான பின்னும் தமது அன்றாட வாழ்க்கையை உறுதிசெய்துகொள்வதே மிகப்பெரிய சாதனையாக இந்தியாவின் 35 கோடி மக்கள் செய்துவருகிறார்கள் என்று எண்ணியபோது நமது மக்களாட்சியின் மீது வெறுப்பு தட்டாமல் இல்லை. வெறும் கணக்குகளின் வழியாக காகிதப்புலிகளாக நமது அரசு அமைப்பு இயங்கிவரும் சூழலில் மாற்று ஏற்பாடுகளை நம்மைப்போன்ற மக்களின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நிறுவனங்கள் முன்வைப்பது தவிர்க்கமுடியாததாகிறது.
ஏழைகளை, பஞ்சத்துக்காக பிச்சை எடுப்பவர்களை பெரும்பான்மைச் சமூகம் புறக்கணித்துத்தான் வந்துள்ளது. அவர்களின் நிலையினை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. அவர்களுக்கு எந்த மரியாதையையும் தருவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களை கீழ்மைப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் நம்மை அப்படி பார்ப்பதில்லை. இன்றைக்கும் ஒரு நகரத்து இளைஞன், படித்தவன் கிராமத்திலிருக்கும் ஒரு ஏழை வீட்டுக்கு சென்றால் அந்த ஏழை நிச்சயம் மதிக்கத்தான் செய்வான். தன்னிடமிருப்பதை பகிர்ந்துகொள்ளவும் தயங்குவதில்லை. ஏழை மக்களின் இந்த தன்மையே நமது தேசம் இன்னும் அமைதியாக இருப்பதற்கு அடித்தளமாக இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் ஏழைகளுக்கு உதவுதல் பெரிய கருணையாக கருதப்பட்டது. ஆனால் தற்சமயத்தில் நமது மக்களாட்சி முறையும் நடுத்தட்டு மற்றும் மேல்தட்டு வர்கமும் ஆரோக்கியமாக, பாதுகாப்பாக இருப்பதற்கு அவர்கள் மீது கருணையுடன் இருப்பது நம்முடைய பெருந்தன்மை என்ற நிலைப்பாட்டைத் தாண்டி தவிர்க்க முடியாததாகவும் மாறி வருகிறது. பணக்காரர்கள் நிம்மதியாக இருப்பதற்காகவாவது ஏழைகள் முன்னேற்றப்படவேண்டும் என்ற புதிய புரிதல் வலிமையாக எழுந்து வருகிறது.

மனிதனால் சிறு மணற்துகளைக் கூட முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது என்ற மிகப்பெரிய தத்துவத்தை மறந்துவிட்டு நமது அரசு அமைப்புகள், அரசியல்வாதிகள் எளிய மக்களின் மீட்பராக தம்மை எண்ணிக்கொண்டு செய்யும் செயல்பாடுகள் நம்மைப் போன்ற மக்களின் சுயகௌரவத்தையும், சுய நம்பிக்கையையும் மேம்படுத்தி அவர்களுக்கான நிறுவனங்களை அமைத்துக்கொடுக்கும் அரிய, கடின சூழலை சீட்டுக்கட்டைப் போல வெகுசுலபமாக கலைத்துவிடுகிறது.

திருவாலங்காடு வட்டாரத்தில் 15 வருடங்களாக கட்டமைத்த நமது மக்கள் அமைப்பை, தற்காலிக தேவைகளுக்காக வாழ்ந்து காட்டுவோம் (இப்போது புதுவாழ்வு) திட்ட பணியாளர்கள் குலைப்பதும், அதை எதிர்த்து நமது பணியாளர்கள், தலைவிகள் போராடுவதும் தினசரி நிகழ்ந்து தான் வருகிறது. ஏற்கனவே உழைப்பாளிகளாய் இருந்த கிராமத்து மனிதர்களை 100 நாள் வேலை என்ற திட்டத்தின் மூலம் சோம்பேறிகளாக ஆக்கியது அரசு அதிகாரிகள் என்றால், தேர்தல் காலங்களில் இலவசங்களை அள்ளிக்கொடுத்து வாக்காளர்களின் பெரும் பகுதியினரை ஊழல்வாதிகளாக மாற்றிய பெருமை அரசியல்வாதிகளை சாரும்.

நாம் இந்த சூழலில் தான் அறப்பண்புகளை மீட்டெடுக்க போராடவேண்டியுள்ளது. எதுவுமில்லாத இடத்தில் புதிய ஒன்றை ஆரம்பிப்பதை விட ஏற்கனவே அரித்துப்போயிருக்கும் பாழினை சீரமைப்பது கடினமான  செயல். இதில் ஒருங்கிணைந்து, ஒரே பலத்துடன் ஒரே எண்ணத்துடன் செயல்படவேண்டியுள்ளது.

என்னுடைய இருசக்கர வாகனத்தில் 100க்கணக்கான தனித்தனி இயந்திர பாகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் தனித்தனியே ஒவ்வொறு விதமான வேலைகளை செய்கின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஒன்றாக இணைக்கப்பட்ட பின், நான் வண்டியை துவக்கியதும் முழுமையான வாகனமாக அது செயல்படுகிறது. அதே  போல வளர்ச்சிப்பணியில் பல்லாயிரக்கணக்கான பேர் அவரவர் அளவில் செயல்பட்டு வந்தாலும் அனைவரும் ஒத்திசைந்து செயல்படும் போது முழுமை கிடைக்கிறது. இதனையே கீதை கர்மயோகமாக சொல்கிறது. வளர்ச்சிப்பணியில் கர்மயோகத்தை நெறிபடுத்தும் தளமாக ஆற்றுப்படுதல் முகாம்கள் அமையும் என்ற நம்பிக்கையில் இந்த அறிக்கையை தொடர்கிறேன்.

2. குன்; ஃபயா குன்:
எல்லா நாட்களையும் போலத் தான் அன்றைக்கும் ஆரம்பித்தது. நான் திருவாலங்காடு வட்டார அலுவலகத்தில் இருந்தேன். அப்போது கனகம்மாசத்திரம் கிராமத்துக்கு வெளியே குளத்துக்கரையில் குடியிருக்கும் களஞ்சிய உறுப்பினர்கள் மொத்தமாக அலுவலகம் வந்திருந்தனர். அவர்கள் குடியிருக்கும் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை வரவிருப்பதாகவும் அதற்காக அவர்கள் குடியிருப்புகளை இடிப்பதற்கான ஆயத்தங்களுடன் அலுவலர்கள் குழுமியிருப்பதாகவும், களஞ்சியத்தின் மூலம் இதனை தடுத்து நிறுத்தகோரினார்கள்.

தீர விசாரித்துப்பார்த்ததில், அவர்கள் குடியிருக்கும் பகுதி தண்ணீர் குளத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதி என்பதும், அவர்களில் யாருக்கும் சொந்த பட்டா இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் ஒரு வருடம் முன்பே இந்த பகுதியில் நெடுஞ்சாலை வரப்போகிறதென நோட்டிஸ் அளிக்கப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் இதற்கு முன் நடந்த நமது களஞ்சிய உறுப்பினர்கள் எப்படியும் தாங்கள் குடியிருக்கும் இடத்தை சொந்தமாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது பிரச்சனை பெரிதானவுடன் அவர்களின் தினசரி வாழ்வே  கேள்விக்குறியாகிவிட்டது.

அவர்கள் களஞ்சியத்தின் மீது  வைத்திருந்த நம்பிக்கைக்காக நமது பணியாளர்கள் மக்களுடன் சேர்ந்து வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரை பார்க்கச் சென்றார்கள். நானும் வட்டாரத்தின் சார்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இந்த நில கையகப்படுத்தலை தற்காலிகமாக தள்ளி வைக்கவும், மாற்று ஏற்பாடுகளை செய்யவும் கடிதம் அனுப்பினேன். அடுத்த மூன்றாவது நாள் எங்கள் மாவட்டத்தை சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர் முதல்வரின் பரிந்துரையின் பேரில் நமது மக்களை நேரில் பார்வையிட்டார். நெடுஞ்சாலைத்துறை பணியினை தற்காலிகமாக நிறுத்தியும் வைத்தார். அங்கு குடியிருந்த மக்களுக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்வதாக வாக்குமளித்தார். மக்களுக்கான வாழ்வாதார பிரச்சனை தற்காலிகமாக தீர்க்கப்பட்டது.

இது போன்ற சந்தர்ப்பங்கள் நமது மக்களாட்சித் தத்துவத்தின் அபத்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மக்கள் தமது சுயநலத்தை சார்ந்தே இயங்கிவருகிறார்கள். அறம் என்பதற்கு தங்களுக்கு வாகான விளக்கத்தை அளித்துக்கொள்கிறார்கள். எப்போதும் மக்களாட்சி என்பது மக்களின் விருப்பத்தை சார்ந்தியங்குமே தவிர நல்வழி சார்ந்திருப்பதில்லை என்பதை இந்த நிகழ்வும் புரியவைத்தது.

வாழ்க்கை பிரச்சனை மிகுந்தது தான். அதிலும் ஏழை மக்களின் வாழ்வு பெரும் சவால்கள் நிறைந்தது. இதில் முறையான வழிகாட்டுதலையும், ஒருங்கிணைந்த சக்தியையும் உறுதிசெய்வதில் நமது பங்கு அளப்பரியது. திருக்குரானில் வரும் “குன்; ஃபயா குன்” வாசகம் நினைவுக்கு வருகிறது. பிரபஞ்ச வெளி எதுவுமற்று இருந்த போது இறைவன், “குன்” (பிரபஞ்சம்) என்று சொன்ன அடுத்த வினாடிக்குள்ளாகவே “ஃபயா குன்”, நட்சத்திரம், கோள்கள் என மொத்த பிரபஞ்சமும் வெளிப்பட்டதாம். இறைவனின் அளப்பரிய சக்தியை புரியவைக்க சொல்லப்பட்ட ஆழமான வாசகம். அது போல, “வளர்ச்சி” என்று சொன்னவுடன் உலகத்தில் இருக்கும் எல்லா மக்களின் பிரச்சனையும் தீர்ந்து மக்கள் மகிழ்வை பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?  

3. வாழ்வாதாரத்தின் மீது புதிய வெளிச்சம்:
கடந்த வருடம் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் எங்களின் மண்டல அளவில் உறுப்பினர்களின் வாழ்க்கை நிலை வாழ்வாதார செயல் பற்றி விரிவாகவே புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டன. உண்மையிலேயே இந்த நிகழ்வு எங்கள் அணியினருக்கு பல படிப்பனைகளை அளித்தது.

மொத்த உறுப்பினர்களில் குறிப்பிடத்தகுந்த அளவினர் தமது வாழ்க்கை நிலையை முன்னேற்றியுள்ளனர். இதற்கு களஞ்சிய மற்றும் வயலகத்தின் சேவைகளும் தவிர்க்கமுடியாததாக இருந்து வந்துள்ளதை புரிந்து கொள்ளமுடிந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக சுமார் 200க்கும் மேற்பட்ட களஞ்சியங்கள் திருவாலங்காடு, காட்டாங்குளத்துர், வாலாஜா பகுதிகளில் இன்றைக்கும் மிகப்பெரிய ஆர்வத்துடன் செயல்பட்டு வருவது மனநிறைவாக இருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரங்களை பகுக்கும் போது விவசாயம் சார்ந்த தொழில்களின் பங்களிப்பு குறைந்து வருவதை உணர முடிகிறது. உறுப்பினர் குடும்பங்களின் சராசரி வருமானம் உயர்ந்திருந்தாலும்  அதைவிட அதிகமாக செலவுகளும் உயர்ந்தே இருக்கிறது. உறுப்பினர் குழந்தைகளின் கல்விக்கும்  திறன் சார்ந்த தொழில்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதும் நிதர்சனமாக புரிகிறது.

அதே போல ஆம்பூர் பகுதியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தோல் பதனிடுதல் சார்ந்த தொழில்களில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தாலும் தொழில் சார்ந்த அபாயத்தை தவிர்பதில் நம்முடைய முயற்சிகளை இன்னும் பலப்படுத்த வேண்டியுள்ளது. எதேச்சையாக ஆம்பூர் பகுதியின் காப்பீடு விவரங்களை ஆய்வு செய்த போது, வெளிப்பட்ட உண்மைகள் கவலையளிப்பதாக இருந்தது. இந்த ஆண்டு மொத்தம் காப்பீடு செய்யப்பட்ட 4500 உறுப்பினர்களில் 35 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 60 வயதுக்குட்பட்டவர்கள். இதில் 17 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள். இந்த பகுதியின் சராசரி ஆயுட்காலம் மிகக்குறைவாக இருப்பதும், காப்பீட்டுக்கான நாம் கட்டிய பங்குத்தொகையை விட இரண்டு மடங்குக்கும் மேல் கேட்புத்தொகை பெற்றிருப்பது  தீவிர ஆய்வுக்குட்படுத்தவேண்டிய விஷயமாகப்படுகிறது.

இது தவிர தோல் மற்றும் சாயம் சார்ந்த மிக கடினமான பணிச்சூழலில் பலமணிநேரங்கள் இருப்பதால் ஏற்படும் நோய்களின் தீவிரமும் அதிகம். பெரும்பாலும் பெண்களே இந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நமது களஞ்சிய உறுப்பினர்களில் 2000க்கும் அதிகமானோர் இவ்வேலையை சார்ந்திருப்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமாக இருக்கிறது. குறைந்த ஊதியத்தில் மக்களின் உழைப்பை உறிஞ்சும் இது போன்ற வாழ்வாதாரங்களை எதிர்பதும், மாற்று வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுப்பதும் கூட நமது பொறுப்பாகும்.

4. அம்பின் நிழல்:
“ஒரு அம்பு வில்லில் இருந்து புறப்பட்டு நேராக இலக்கை அடைகிறது. அதன் நிழல் ஊரெல்லாம் ஓடி வளைந்துசென்று அதே இலக்கில், அதே கணம் சென்று தைக்கிறது” என்ற அழகான உவமை புறநானுற்றில் சொல்லப்பட்டிருக்கும். வளர்ச்சி பற்றிய புரிதல் இல்லாமல் சமூக சேவை செய்பவர்களின் பணி எளிதானது. ஆனால் வளர்ச்சியை தொலைநோக்குப் பார்வையுடன் முழுமையான செயல்பாடாக செய்வது கடினம் தான். வாழ்வாதாரத்தை மேம்படுத்த நேரடியாக இலவசங்களையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்துதல் எளிமையான செயல் என்றால், துணைத்துறைகளில் செய்யப்படும் செயல்பாடுகளின் வாயிலாக குறுநிதி மற்றும் பிற திட்டங்களின் மூலம் நாம் மக்களில் வாழ்வாதாரத்தை நிலைக்கச்செய்ய எடுக்கும் முயற்சிகள் விரிவான, சிக்கலான அணுகுமுறை. நம்முடைய தேர்ந்த திட்டமும், விடாமுயற்சியுமே அதனை சரியான விளைவில் இட்டுச்செல்லும்.

5. கீதாமுகூர்த்தம்:
பணியின் போது, 40,000க்கும் அதிகமான கடன் தேவையிருக்கும் உறுப்பினர்கள் கடன் அனுமதிக்காக என்னை சந்திக்க வருவார்கள். பொதுவாக கடனுக்கான காரணம் மக்களுடைய திருமணம், வீடு கட்டுதல், மருத்துவம் என்றிருக்கும். இன்னும் கொஞ்சம் ஆழமாக விசாரித்துப் பார்த்தால் அந்த அளவுக்கான கடன் தேவை இருக்காவிட்டாலும் கேட்டுவைப்போமே என்ற எண்ணத்தில் உறுப்பினர்கள் அதிகபட்ச கடனை கேட்டிருப்பார்கள்.

இந்து மத முறைமையில் “கீதாமுகூர்த்தம்” என்ற ஒரு விஷயத்தை சொல்லுவார்கள். பகவத் கீதையை எதோ கதைப்புத்தகத்தை படிப்பது போல நமக்கு பொழுதுபோகாதபோது படிப்பது பயன்தராது. வாழ்வில் தீராத் தாகமும், அடுத்து எடுத்து வைக்க வேறுவழியே இல்லை என்ற நிலையிலும் மட்டுமே கீதை புரிய ஆரம்பிக்கும். அது போன்ற தத்துவப்புத்தகங்களை பெயருக்கு படிப்பது நோயற்றவன் மாத்திரையை சாப்பிடுவதைப் போல. புதிய நோய்களைத் தான் அது உருவாக்கும். அதே போல, களஞ்சிய உறுப்பினர்களும் தமக்கான தேவை இருக்கிறதோ இல்லையோ, கடனை பெற்றுவிடவேண்டும் என்று முயற்சிப்பது புதிய சிக்கல்களைத் தான் ஏற்படுத்தும். வட்டாரத்தின் கொள்கைகளைத் தாண்டி, உறுப்பினரின் குடும்பநிலைப்பாட்டை சார்ந்து நாம் இயங்கும் முறையை மாற்றிக்கொள்வதின் மூலம் இதனை குறைக்கமுடியும்.

6. தரப்படுத்துவதும் தனித்துவப்படுத்துவதும்
நாம் பார்க்கின்ற எல்லாவற்றையும் தரப்படுத்தப் பழகிவிட்டோம். தரப்படுத்துவதை மிகச்சிறந்த மேலாண்மைப் பணி என்றும் கொண்டாடுகிறோம். ஆனால் அவ்வாறு தரப்படுத்தப்படும் போது நாம் கீழ்மையானது என்று புறக்கணிக்கும் விஷயத்துக்குள்  இருக்கும் தனித்துவத்தை கவனிக்க மறக்கிறோம்.

19ம் நுற்றாண்டில் சீனாவில் வாழ்ந்த யுயான்ஜா, சீனதற்காப்பு கலையான “வூசு”வை கையாளுவதில் புகழ்பெற்றவர். தத்துவவாதியும் கூட. அவரை பார்க்கவும் அவருடன் சண்டையிட்டு ஜெயிக்கவும் கராத்தேவில் புகழ்பெற்ற அன்னோ தனகா என்பவர் ஜப்பானில் இருந்து வந்திருந்தார். தனகாவைப் பொறுத்தவரை உலகில் கராத்தே கலையைவிட சிறந்த கலை இருக்கமுடியாது என்ற நம்பிக்கை. யுயான்ஜாவுடனான அறிமுக விருந்தில், அவருக்காக தனி கவனத்துடன் ஜப்பானில் இருந்து எடுத்துவந்திருந்த உயர்ரக தேயிலைகளை அனகா பரிசளித்தார். “இதுபோன்ற முதல் தர தேயிலைகள் கிடைப்பது அறிது” என்று பெருமையுடன் அனகா கூறியபோது, யுயான்ஜியா லேசாக சிரித்துக்கொண்டே “மனிதர்கள் தான் இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று தரம் பிரிப்பார்கள். ஆனால் பூமியில் வளர்கின்ற எல்லாத் தேயிலைகளும் அதனதன் தனித்துவத்துடனே இருக்கின்றன” என்று கூறுவார். யோசித்துப்பார்க்கும் போது எவ்வளவு உண்மை என்று புரியவரும். மனிதர்களை, நாம் வாங்கும் பொருட்களை, பார்க்கும் எல்லாவற்றையும் தரம் பிரிப்பதும் உயர்ந்தது தாழ்ந்தது என்று பிரித்து வைத்துப் பார்ப்பதும் சமூகத்தின் சமத்துவத்துக்கு எதிரான செயலாகப் படுகிறது. வளர்ச்சிப் பணிகளில் தரப்படுத்துவதை விட பார்க்கின்ற எல்லாவற்றிலும் இருக்கும் தனித்துவத்தை கவனிக்கத் தொடங்கினால் அற்புதம் நிகழும்.

7.காணாமல் போனவர்கள்:
போன பிப்ரவரி மாதம் வரிசையாக யெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை நிகழ்த்தினோம். அதற்கான ஏற்பாடுகளின் போது நிகழ்ச்சி மேடையில் பின்புலத்தில் பதாகை (பேனர்) வைப்பதற்காக பேசிக்கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் பதாகைகள் யெகிழிப்பொருளின் மூலம் கணினி வழியாக தயாரிக்கப்படுவதால் இதனை கைப்பட துணியில் எழுதும் ஓவியரை கண்டுபிடிப்பது சிரமமாகிவிட்டது. கடைசியில் ஒருவர் கிடைத்தார். ஆனால் அவரும் இந்த வேளையை செய்வதில்லை. எதோ ஒரு தொழிற்சாலையில் கூலிக்கு சென்றுகொண்டிருப்பவர். பிறகு நம்முடைய தொடர்ச்சியான வற்புருத்தலால் அவரும் அவருடைய நண்பரும் இணைந்து எழுதிகொடுத்தனர்.

தொழில்நுட்பப் புரட்சியால் நாம் மறந்த, புதைத்த நமது மண் சார்ந்த வாழ்வாதாரங்கள் தான் எத்தனை! தேசம் வளர வளர, நமது உணவுமுறை, பயன்படுத்தும் பொருட்கள், மகிழும் கலைகள் என அனைத்திலும் நமக்கான தேர்வு குறைந்துகொண்டே வருகிறது. எனது பெற்றோர் தமது உணவில் தினசரி உண்ட சிறுதானியங்களை நான் என் சிறுவயதில் சிலசமயம் புசித்திருக்கிறேன். அடுத்து என் மகள் அதனை கண்ணாலாவது பார்ப்பாளா என்பது சந்தேகமே. ஒருமுறை சென்னையில் மதியபொழுதில்  உணவகத்துக்கு செல்லவேண்டியிருந்தது. அங்கு மேசையை துடைக்கும் பணியில் ஒரு பெரியவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கம்பீரமான முகம். பெரிய மீசை. பிறகு விசாரித்தபோது, அவர் விழுப்புரம் பக்கம் கூத்துவாத்தியார் என்று தெரியவந்தது. தனித்துவம் மிக்க கலைஞனை மேசை துடைக்கவைத்த இந்த சமூகம், அது தனிமனிதன் மீது செலுத்தும்  அழுத்தம், அதன் மதிப்பீடுகள் பற்றி யோசிக்க யோசிக்க வெறுமைதான் மிஞ்சியது.

எங்கள் வீட்டில் ஒரு பின் மாலைப்பொழுதில் வெட்டுக்கிளி வந்துவிட்டது. எங்கள் வீட்டைச் சுற்றி சுமார் 3 கி.மீ சுற்றளவில் விவசாய பூமி இல்லை. எல்லாம் வீடுகள். இந்த இடத்தில் வெட்டுக்கிளி வாழ்வது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அது வந்தவுடன், எங்க அம்மாவுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டு அதனை லாவகமாக வெளியே துரத்தும் வரை நிம்மதியில்லை. இப்படித்தான் நமக்கான தேவைகளும், விருப்பங்களும் குறுகிக்கொண்டே வருகின்றன.

பிருந்தாவனத்தில் எல்லா உயிர்களையும் அரவணைத்து “வசுதேவ குடும்பகமாக” கிருஷ்ணன் காத்தது போல நம்மால் உலக உயிர்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செல்லமுடிவதில்லை. மனித உயிரின் பல பிரச்சனைகளுக்கான ஆணிவேர் இங்கிருந்து தான் துவங்குகிறது. உலகம் மனிதனுக்கு மட்டுமானது என்ற அடிப்படையற்ற பேராசையின் விளைவைத் தான் பருவகால மாற்றம், பேரிடர் தாக்கம் என்று பன்முனை இழப்புகளை சந்தித்துவருகிறோம்.

8. கற்றுத்தரும் குழந்தைகள்:
ஆசை - சசியுடைய இரண்டாவது குழந்தை நேத்ராவுக்கு இப்போது ஒன்றரை வயது ஆகிறது. அவள் என்னுடைய தோழி. அவர்களின் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் அவளின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்ளும். வீட்டில் இருக்கும் போது, காலருகே வந்து, “மாமா, வாக்கி” என்று வெளியே கூட்டிப்போகச்சொல்லுவாள். சரி, போகலாம் என்று சொன்னவுடன், பெருமகிழ்ச்சி கொண்டு தன் செருப்பை போட்டுக்கொள்வாள், வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் டாட்டா சொல்லிவிட்டு, முகமெல்லாம் சிரிப்புடன் வெளியே போக என் கையை இழுத்துக்கொண்டிருப்பாள். ஆனால் வேறு பணிகளுக்காக அவளை விட்டுவிட்டு நானும் ஆசையும் மட்டும் கிளம்பிவிடுவோம். வண்டியில் நாங்கள் மட்டும் கிளம்பும் போது, பெருங்குரலெடுத்து அழுவாள். கண்களில் கண்ணீர் பெருகும். அந்த தெருவிலிருந்து மறையும் வரை அவளது அழுகைக் குரல் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். பிறகு எங்கள் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு திரும்பவும் வீட்டுக்கு வந்தால், நேத்ரா மறுபடியும் “மாமா” என்று மகிழ்ச்சியாக கத்திக்கொண்டே ஓடிவருவாள். கூட விளையாடுவாள். அவளுக்கு அவளை நான் ஏமாற்றியது மறந்தேபோயிருக்கும்.

எல்லா குழந்தைகளின் உலகமும் இப்படித்தானிருக்கிறது. அவர்கள் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறார்கள். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்வது எவ்வளவு பெரிய வரம்! வருத்தம், மகிழ்ச்சி, கோபம் எல்லாம் அந்த கணத்தில் வெளிப்பட்டு அப்போதே தீர்ந்தும் போய்விடுகிறது. நமது பணிச்சூழலில் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அவர்களின் தீரா உற்சாகம், புதியதை கற்றுக்கொள்ளும் ஆர்வம், வித்தியாசமானதைப் பற்றிய தேடல், அடுத்தடுத்த நிகழ்வுகளை சந்திக்கும் விருப்பம், கடந்த காலம்/வருங்காலம் பற்றிய கவலையின்மை என குழந்தைகள் இயல்பாய் கொண்டிருக்கும் தெய்வீக குணங்கள் நமக்கும் மிகப்பொருத்தமானவை தான்.

நாம் கூட இந்த இயல்புகளை நமது சிறுவயதில் கடந்தே வந்திருப்போம். ஆனால் சமூகம் எல்லா குழந்தைகளையும் சாதாரண மனிதர்களாக காலப்போக்கில் குணப்படுத்திவிடுகிறது. அதுதான் துரதிருஷ்டம்.

9. 21 அயிரி
மகாபாரதத்தில் யட்சன் தருமரிடம் உலகின் மாபெரும் வேடிக்கை எது என்று கேட்க, ‘கணந்தோறும் மானுடர் சாகக்கண்டும் வாழ்வு நிலையானது என்று எண்ணும் மனிதப் பேதமைதான்’ என்று அவர் பதில் கூறுகிறார். 1901ம் ஆண்டில் டங்கன் மெக்டகால் எனும் அமெரிக்க மருத்துவர் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வுகளில் மனிதன் இறக்கும் போது அவரது உடலின் மொத்த எடையில் சராசரியாக 21 அயிரி (கிராம்) குறைவதை உறுதிசெய்துள்ளார். இதன் மூலம் மனித உயிரின் எடை 21 அயிரி என்ற கருத்து நிறுவப்பட்டது. இந்த 21 அயிரி எடையுள்ள பொருள் தான் நம் முழு வாழ்க்கையையும் ஆக்ரமித்து செலுத்திவருகிறது என்று யோசிக்கும் போது பெருவியப்பு ஏற்படுகிறது. உடலின் மொத்த எடையில் 0.03%க்கும் குறைவாக இருக்கும் உயிர் எனும் பொருள் நமது உடலை முழு ஆதிக்கம் செலுத்தி வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் போது, மொத்த மானுட சமூகத்தில் நம்மைப்போன்ற வளர்ச்சிப் பணியாளர்களின் இருப்பு மிகக்குறைந்த, புறக்கணிக்கக்கூடிய சதவீதத்தில் இருந்தாலும் நமது வீரியமான செயல்பாட்டால் சமுதாயத்தை நேர்வழி படுத்தமுடியும். நம்பிக்கை கொள்வோம். செயல்படுவோம்.

நன்றி!  




2010: மணற் கேணி


“அது முழுமை; இதுவும் முழுமை.
முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்டபின்னும்
முழுமையே எஞ்சி நிற்கிறது”
- ஈசா உபநிஷதம்



1. பிரபஞ்சத்தை சுமந்து திரிபவன்...
புத்தமதக்கலாச்சாரத்தில் “காலச்சக்ரா” எனப்படும் சடங்கு சிறப்பானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் எதாவது ஒரு இடத்தில் தலாய்லாமாவின் தலைமையில் இது நிகழ்த்தப்படும். பிரபஞ்சத்தின் கட்டமைப்பை, வண்ணப்பொடிகளைக் கொண்டு மிக நுணுக்கமாக, காலச்சக்கரமாக வரையும் இந்த நிகழ்வு, நிலையாமை மற்றும் காலத்தின் இயக்கம் பற்றிய மிகமுக்கியமான குறியீடாக கருதப்படுகிறது.

இலட்சக்கணக்கான புத்தபக்தர்கள் முன்னிலையில் தேர்ந்த புத்தபிக்குகளின் அணி ஒரு மேசையின் மீது பல வண்ணப்பொடிகளைக் கொண்டு சில மில்லிமீட்டர் கோட்டுச்சித்திரமாக காலச்சக்கரத்தை வரைய ஆரம்பிப்பார்கள். புத்தபிக்குகள் பல அணிகளாக பிரிந்து இரவும் பகலும்மென வரையும் இச்சக்கர ஓவியம், தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு ஓய்வில்லாமல் நீண்டுச்செல்லும். அங்கு கூடியிருக்கும் எல்லாருடைய மனமும் அந்த வரைபடத்திலேயே நிலைத்திருக்கும். மிகநீண்ட உழைப்பில் வரையப்பட்ட காலச்சக்கரத்தை, தலாய்லாமா பார்வையிட வருவார். வந்ததும் ஒரேவீச்சில் அந்த வரைபடத்தை கலைப்பார். பிறகு, வண்ணப்பொடிகளை மொத்தமாக குவித்தெடுத்து அருகிலிருக்கும் நதியில் கரைத்துவிடுவார். அத்துடன் காலச்சக்ரா நிகழ்வு முடிவுக்கு வரும். பற்றின்மை பற்றிய புரிதலையும் காலம் எனும் பொருளின் தன்மையையும் குறியீடாக உணர்த்தும் இந்த நிகழ்வு பங்கெடுக்கும் அனைவருக்கும் அற்புமான தியான அனுபவமாக விளங்கும்.

இதுபற்றிய ஆவணப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு இடத்தில், பேட்டியாளர் தலாய்லாமாவிடம், “பிரபஞ்சத்தின் மையம் எது?” என்று கேட்பார். தலாய்லாமா, “நான்தான்” என்று சொல்லிவிட்டு, “என்னுடைய பிரபஞ்சத்துக்கு நான் மையப்புள்ளி, உங்களுடைய பிரபஞ்சத்துக்கு நீங்கள் மையப்புள்ளி. நாம் ஒவ்வொறுவரும் நமக்கான பிரபஞ்சத்தின் மையமாய் திகழ்கிறோம். பிரபஞ்சம் என்ற கோட்பாடே மனதின் கற்பிதம்” என்று சிறுசிரிப்புடன் சொல்லுவார்.

எனக்கு இந்த பதில் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. யோசித்துப்பார்க்கும் போது எவ்வளவு பெரிய தத்துவம் என்று வியந்துபோனேன். நாம் ஒவ்வொறுவருமே நமக்கான பிரபஞ்சத்தைத் தூக்கித்திரிந்து கொண்டிருக்கிறோம். அதன் மையமாக நமது மனம் இயங்குகிறது. நாம் நடக்கும் போதும் உறங்கும் போதும் எல்லைகளின்றி விரிந்த நம்முடைய பிரபஞ்சமும் நம்முடன் இயங்குகிறது. நமது பண்புகளே நமக்கான பிரபஞ்சத்தை காலச்சக்கரமாய் கட்டமைக்கிறது. இதுவே நமது மகிழ்ச்சியாகவும் துன்பமாகவும் வாழ்க்கையில் பிரதிபளிக்கிறது என்று தொடர்ச்சியாக நினைத்துச் செல்லச் செல்ல சுயத்தின் வலிமையும் அதை உணராமல் இருக்கும் வெறுமையும் எனக்குப் புலப்பட்டது.

என்னுடைய எண்ணங்களும் செயல்களுமே எனக்கான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்பது உண்மையென்றால், எனது எண்ணங்களையும் செயல்களையும் நான் செம்மையாக்கிக் கொள்வது என்னுடைய கடமையாகிறது. நான் இருசக்கரவாகனத்தை ஓட்டிச்செல்லும் போது, வண்டியின் இயக்கத்துடன் எந்தத் தொடர்புமில்லையென்றாலும், எனக்கு பின்னாலிருக்கும் பாதையைக் காட்டும் கண்ணாடியை அவ்வப்போது பார்த்துக்கொள்வது அவசியப்படுகிறது.

அதே போல வாழ்க்கையிலும், நிறுவனம் சார்ந்த பணித்தளத்திலும் நான் செய்த செயல்பாடுகளைப் பற்றி திரும்பிப்பார்ப்பது அவசியம். இது போன்ற ஆற்றுப்படுதல் நிகழ்வுகள் அதற்கான வாய்ப்பை ஏற்பத்தித் தருவதாக எண்ணுகிறேன். இந்த ஆற்றுப்படுதலை நான் நிறுவனத்தின் செயல்பாட்டைச்சார்ந்து மட்டும் அளவிடாமல், மொத்தமாக என்னுடைய சுயத்தின் தன்மை பற்றியும், என்னை மையமாய் கொண்டியங்கும் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளவும் கிடைத்தவாய்ப்பாய் நிகழ்த்திக் கொள்கிறேன்.

2. ஒரு கோப்பை வாழ்க்கை...
நான் காஞ்சி - வேலுர் மண்டலத்தில் தானம் அறக்கட்டளைப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறேன். கூடுதலாக பஞ்சாயத்து திட்டத்தின் திட்டஅணி உறுப்பினராகவும் டாடா தானம் அகடமியில் இணைப்புலமையாளராகவும் செயல்படும் வாய்ப்பும்கிட்டியுள்ளது. எனது சொந்த ஊர், சென்னைக்கு அருகிலிருக்கும் திருத்தணி. என்னுடைய தந்தை நிலவள வங்கியில் செயலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அம்மாவும் எனது மனைவியும், வீட்டுப் பணிகளை நிர்வகித்து வருகின்றனர். எனது தம்பி, வழக்கறிஞராக இருக்கிறான். இந்த சிறிய குடும்பம் எனக்களித்துள்ள அன்பும், என் மீதான நம்பிக்கையும், அவர்கள் எனக்களித்த சுதந்திரமும் அற்புதமானது.

அடிப்படையில் நான் மருந்தியல் பட்டதாரி. என்னுடைய பட்டப்படிப்புக்குப்பின், இந்திய குடிமைப் பணிகளுக்காக தயார் செய்து கொண்டிருந்தேன். கூடவே அஞ்சல் வழியில் பொது நிர்வாகத்தில் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்தேன். என்னால் குடிமைப்பணியில் தேர்ச்சிப்பெற முடியவில்லை. ஆனாலும், அதற்கான தயாரிப்புக்காக நான் படித்த, கற்றுக் கொண்ட பல விஷயங்கள், எனக்குள் ஓர் பரவலான அறிவுத்தளத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்திய அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த அறிவு விரிவானது. சமுதாய முன்னேற்றத்தில் இளைஞர் பங்களிப்பை நன்கு உணர்ந்தேன். அப்போது கிடைத்த டாடா - தான் அகடமியின் அறிமுகம், தன்னார்வத் துறை பற்றிய வாசலைத்திறந்து வைத்து வளர்ச்சி மிகச்சரியான புரிதலை எனக்குள் ஏற்படுத்தியது.

அகடமியில் படித்தப்பிறகு பஞ்சாயத்து திட்டத்தின் வத்தலகுண்டு கள அலுவலகத்தில் 3 ஆண்டுகள், பஞ்சாயத்து திட்ட அலுவலகத்தில் 3 ஆண்டுகள், தற்போதய காஞ்சி-வேலுர் மண்டலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இது என்னுடைய எட்டாவது ஆற்றுப்படுதல் முகாம். நேற்று தான் பணியில் சேர்ந்தது போல் இருக்கிறது. அதற்குள் எட்டு வருடங்கள் ஓடிப்போய்விட்டது ஆச்சரியமாக உள்ளது.

இந்த ஆண்டுடன் தானம் அறக்கட்டளையுடனான எனது தொடர்பு அகடமி வாழ்க்கையையும் சேர்த்து 10 ஆண்டுகளைத் தாண்டப்போகிறது. என்னுடைய 22வது வயதில் உள்ளே வந்த நான் என் வாழ்க்கையின் மிக முக்கிய பத்து ஆண்டுகளை இங்கு கழித்துள்ளேன். உண்மையிலேயே நான் இணைந்திருந்த இந்த காலகட்டத்தில், நிறுவனமானது எனது வாழ்க்கைமுறையில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாது. நிறைய நண்பர்கள், நிஜ அக்கறையுள்ள சக பணியாளர்கள், தொழில்முறை பணிச்சூழல், ஈர்க்கும் சக்தி கொண்ட மூத்தப் பணியாளர்கள் என பல வகைகளில் எனக்குள் தானம் குழுமம் கரைந்துள்ளது. இங்குள்ள சுயக்கட்டுப்பாடுடன் இணைந்த சுதந்திரத் தன்மை, சில சமயங்களில் அவசியமா என்ற கேள்வி எழுந்தாலும் அந்த போக்கே எனக்குள் ஒவ்வொறு வினாடியும் கற்றல் வாய்ப்பையும் இது என்னுடைய நிறுவனம் என்ற சொந்தத்தன்மையையும் ஏற்படுத்தித்தருவதை மறுக்கமுடியாது.

3. இருளிலிருந்து வெளிச்சத்துக்கு...
இந்த ஆண்டின் மையநோக்க கருத்தாக வாழ்வாதாரத்தை எடுத்து செயல்படவிருக்கிறோம். நமது திட்டங்கள் அனைத்தும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் புரிதலும் பயன்பாடும் நிறுவன அளவில் எல்லா நிலைகளிலும் தளங்களிலும் சமச்சீராக இல்லை என்றே நினைக்கிறேன். “வாழ்வாதாரம்” என்ற சொல்லின் அர்த்தத்தையே பல பணியாளர்கள் பல விதங்களில் தமது அனுபவம் மற்றும் கல்விப்புலப் பின்னணியில் புரிந்திருக்கிறார்கள். இதைச்சமப்படுத்தி, ஒரே புரிதல் ஒரே சிந்தனையை ஏற்படுத்துவது அவசியம். “சகனா பவந்து, சகனம் குணத்து, சக வீர்யத்தை” ஏற்படுத்தினால் நம் செயல்பாடுகள் இன்னும் உச்சத்தைத் தொடும்.

என்னைப் பொறுத்தவரை வாழ்வாதாரம் என்பது வெறும் பொருளாதார நடவடிக்கை இல்லை. அது மக்களின் சமூக-கலாச்சார மேம்பாட்டுடன் தொடர்புடையது. சமுதாயக்கட்டமைப்பில், வர்ணாசிரம கோட்பாட்டைக்கொண்டு மக்கள் பல பிரிவினராக்கப்பட்டு குலத்தொழில் முறைகள் குறிப்பிட்ட சாதிக்கென வாழ்வாதாரமாய் திணிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து வெளிப்படையான, சுதந்திரமான தொழில் முறைகளை மக்கள் தாமே தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மாறிவருகிறோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பனைஏறுவதை மட்டுமே குலத் தொழில் வாழ்வாதாரமாக விதிக்கப்பட்டு ஒடுங்கிக்கிடந்த ஒரு சமூகம், தம்முடைய கூட்டுச் சக்தியால் இன்றைக்கு தமிழகத்தின் சமூக-பொருளாதார நடவடிக்கைகளில் தவிற்கமுடியாத சக்தியாகியிருப்பது கண்முன்னே நிகழ்ந்த மந்திரம். இதை அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு பெரிய உழைப்பும் நம்பிக்கையும் தேவைப்படுகிறது.

4. களவாடியப் பொழுதுகள்...
திருவள்ளுர் மாவட்டத்தின் வடமேற்குப்பகுதி கிராமங்களில் சில குடும்பங்கள் பாரம்பரிய விதைகளை காலங்காலமாக பாதுகாத்து வருகின்றனர். தம்முடைய நிலத்தில் விளைந்த தானியங்களை நான்கு பங்குகளாக பிரித்து, அடுத்த வருட விதைக்காக ஒரு பங்கும், தமது உணவுக்காக ஒரு பங்கும்,  விவசாயத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பங்கும் எடுத்து வைத்து மீதமானதை விற்கும் பழக்கம் இன்றும் உள்ளது. விதைக்காக ஒதுக்கப்பட்ட தானியத்தை தனியாக ஒரு மண்குடுவையில் இட்டு, அதற்கு வெளிப்புறம் குளுமைக்காக செம்மண் பூசி, சுத்தமான இருட்டு அறையில் வருடம் முழுக்க பயபக்தியுடன் பாதுகாத்து வருவர். விதைத் தானியம் இருக்கும் அறை பூஜை அறையைவிட அதிக அக்கரையுடன் பராமரிக்கப்படும். சிறு வயதில் என்னுடைய தாத்தா வீட்டில் பார்த்ததாக ஞாபகம். அதற்க்குப் பிறகு எனது தந்தையோ நானோ விவசாயத்தில் ஈடுபடாததால் கடந்த 2 தலைமுறைகளாக அந்த களஞ்சிய அறை யாரும் கவனிப்பாரற்று சிதிலமடைந்து போயிருக்கிறது. ஏறக்குறைய நிறைய வீடுகளில் இந்த நிலைமைதான். விவசாயியின் மகன் அல்லது மகள் விவசாயியாவதை விரும்புவதில்லை. சென்னைக்குப் பக்கத்தில் ஸ்ரீபெரும்புதுர் பகுதியில் விவசாயம் முழுவதுமாக செத்துவிட்டது.

சமீபத்தில் திருப்போரூருக்கு பக்கத்திலிருக்கும் என்னுடைய நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த பகுதி சமீப காலமாக மிகப்பெரிய தொழில்வளர்ச்சிப் பெற்றுள்ளது. கிராமங்களின் நிறம் மாறிப்போய், விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டடி மனைகளாகவும் தொழிற்கூடங்களாகவும் மாற்றமைந்துள்ளன. சுமார் 100 வீடுகள் மட்டுமே இருக்கும் நண்பனின் கிராமத்தை சுற்றிப்பார்த்தபோது அந்த கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட டீக்கடைகளும் பெட்டிக்கடைகளும் இருந்தது வித்தியாசமாகப்பட்டது. எந்த கடையிலும் வியாபாரமில்லை. கடைகாரர்கள், ரேடியோ கேட்டுக்கொண்டோ, டப்பாக்களை துடைத்துக்கொண்டோ தான் இருந்தார்கள். விசாரித்தபோது, ஊரில் இருக்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலைகளுக்கு விற்றுவிட்டு அவர்கள் கொடுத்த பணத்தில் சொந்த வீட்டைக்கட்டி கூடவே பெட்டிக்கடையையும் வைத்திருக்கிறார்கள். மிச்சமிருக்கும் பணத்தில் வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள், கொஞ்சம் வங்கி முதலீடு என குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கையை சுருக்கிவருகிறார்கள். இந்த மனநிலையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. சொந்தமாக நிலம் இருந்தபோது, விவசாயம் செய்தார்கள். அதில் அதிக லாபம் இல்லையென்றாலும் உணவுப் பாதுகாப்பாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. வளமான விவசாய நிலத்தை தொழிற்சாலைகளுக்கு விற்றுவிட்டு விவசாயிகள் வாட்ச்மேன்களாகவும், சமையல்காரர்களாகவும், ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் மாறிய அவலத்தை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?

இந்தப் போக்கு, இப்போது சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. கூடிய சீக்கிரம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவும். விளைநிலமெல்லாம் கான்கிரீட் காடாக மாறியபின் செங்கலையும் சிமெண்டையுமா நாம் உணவாகக் கொள்ளமுடியும்? கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரத்தின் ஆணிவேர் நமது பாரம்பரித்திலிருந்து கட்டமைக்கப்பட்டது. தற்காலிக பயன்களுக்காக எந்த முன்யோசனையுமில்லாமல் அதை அறுத்தெறிவது நிரந்தரப் பிரச்சனைகளையே கொண்டுசேர்க்கும். நம்முடைய பாரம்பரியத்தை நசுக்கி, அடுத்தத் தலைமுறைக்கு உறுதியான வாழ்க்கையை தரமுடியாத பன்னாட்டுக்கம்பெனிகளின் இந்த பொருளாதார மாற்றம் வேறுவகையான காலனியாதிக்கம் போலவே எனக்குத் தோன்றியது.

5. நீடித்திருக்குமா வாழ்வாதாரம்...
ஒருமுறை திருவாலங்காடு வட்டாரத்துக்குட்பட்ட பனப்பாக்கம் கிராமத்தில் ஒரு குழுக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அதில் 60 வயதுக்கு மேற்பட்ட வயதான உறுப்பினர் ஒருவர் இருந்தார். நான் பேசுவதை எதையுமே அவரால் உள்வாங்கமுடியவில்லை. அவரிடம், இந்த களஞ்சியத்தில் எத்தனை வருடமாக இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, 13 வருடம் என்றார். களஞ்சியத்தில் இருந்ததால் எதாவது பயன் அடைந்திருக்கிறீர்களா? என்ற எனது அடுத்தக்கேள்விக்கு, ரொம்பப் பெருமையுடன், “ஆமாம். களஞ்சியத்தில் சேர்ந்தபிறகு அப்பப்ப வீட்டுத் தேவைக்கு கடன் வாங்குவேன். அப்புறம் பெரிய கடன் எடுத்து பசுமாடு வாங்கினேன்...” என்று சொல்லிகொண்டே சென்றார். உடனே, என்னுடைய நிர்வாக மூளையை அவரிடம் வெளிப்படுத்த, “இப்ப எத்தனை பசுமாடு வைச்சிருக்கீங்க?, ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கிடைக்குது?” என்று கேட்டேன். அவர், “அந்த பசுமாட்டை எப்பவோ வித்துட்டேன் சார். என்றார். நான் அதிர்ச்சியாக. “எங்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அவரோட வைத்தியச் செலவுக்கு நிறைய செலவாயிருச்சி. மாட்டை வித்துத்தான் வைத்தியம் பார்த்தோம். இப்ப அவரால வெளிய வேலைக்கு போகமுடியாது. நான் எதோ கிடைக்கிற கூலி வேலைக்கு போய் வயித்துப்பிழப்பை கவனிக்கிறேன். இப்ப களஞ்சியத்திலும் எனக்கு வயசாயிடதால கடன் தரமாட்டேன்றாங்க. இன்சுரன்சும் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க.” என்று தற்போதய நிலையை அடுக்கிச்செல்லும் போது, எனக்கு அவமானமாக இருந்தது. நீடித்த வளர்ச்சி, நிலையான வாழ்வாதாரம் என்றெல்லாம் அகடமில் படித்து, இந்த எட்டு வருஷத்தில் பல பேருக்கு சொல்லிக்கொடுத்து, நீடித்த வளர்ச்சி நிலைத்த வாழ்வாதாரம் பற்றி பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் எல்லாம் தெளிவாக செய்யத் தெரிந்த எனக்கு என்னுடைய கண் முன்னே, ஒரு உறுப்பினர், தம்முடைய வாழ்வாதாரத்தை இழந்த நிலையிலும் களஞ்சியத்தை பெரிய நம்பிக்கையாய் பார்க்கும் போது நான் செயலாற்றவேண்டிய தளம் வேறு எனப் புரிந்தது.

6. மொத்த உற்பத்தியும் கூட்டு உற்பத்தியும்...
என்னுடைய கல்லூக்காலத்தில் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் ஜெ.சி.குமரப்பாவுடைய "எகனாமி ஆஃப் பெர்மனன்ஸ்" (நிலைப்புத்தன்மைக்கான பொருளாதாரம்) ஒருவகையில் இந்த புத்தகமும் நான் என்னுடைய மையத்துறையை விட்டு வளர்ச்சிப்பணிக்கு வருவதற்கு தூண்டுகோலாக இருந்தது. அவருடைய தத்துவத்துக்கு இன்றும் பெரிய சக்தி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவருடைய கருத்தின் படி, இந்திய மக்களின் வளர்ச்சிக்கு மொத்த உற்பத்தியை விட, உற்பத்தியானது மொத்த மக்களால் செய்யப்படவேண்டும் என்கிறார். அதாவது, இந்துஸ்தான் லிவர் கம்பெனி, மக்களுக்கெல்லாம் சேர்த்து சோப்பை உற்பத்தி செய்வதை விட, ஒரு கிராமத்துக்குத் தேவையான சோப்பு அந்த ஊர் மக்களால் உற்பத்தி செய்யப்பட்டால் உள்ளுர் பணமானது உள்ளுரிலேயே செலவழிக்கப்படும். இது அந்த கிராமத்தின் நீடித்த வளர்ச்சிக்கு உதவும் என்பார். இந்த தத்துவம் மிக முக்கியமான விஷயம். நமது நுகர்பொருட்களை நம் உறுப்பினரே தயாரிக்கச் செய்வதன் மூலமே பணச்சுழற்சியை நம் கட்டுக்குள் வைத்திருக்கமுடியும். இதற்கு முதற்காரியமாக மக்கள் நிறுவனமாக ஒன்றிணையவேண்டும். பின்னர் அவர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்த மதிப்புச் சங்கிலி ஏற்படுத்தப்படவேண்டும். இதனை தரகர்களின் துணையின்றி மக்களே முன்னின்று நிகழ்த்தவேண்டும். இது சாத்தியப்படுமானால் நம்மால் அடித்தள மக்களின் வாழ்வாதாரத்தில் அற்புதத்தை ஏற்படுத்தமுடியும். இதற்கான திட்டமிட்ட செயல்முறைகள் இதுவரை நிகழ்த்தப்படவில்லை என்றாலும் வரும் ஆண்டில் செயல்படுத்த ஆரம்பிக்கவேண்டும். என்னுடைய மண்டலத்தில் இந்த முறைமையை நோக்கிச் செயல்பட முடிமென்ற நம்பிக்கை உள்ளது.

7. பேரிரைச்சலிடையே இனிய இசை...
வாழ்வாதாரத்தை மறுபொறியியல் செய்வதில் உள்ள இன்னொரு சிக்கல், மக்களின் பணப்புழக்க சமன்பாட்டை மாற்றியமைப்பதில் இருக்கிறது. கிராமத்தின் மூலைமுடுக்கெல்லாம் தொலைக்காட்சி வந்த பின், பேருந்து செல்லாத கிராமங்களில் கூட பேர் அன்ட் லவ்லியும் பெப்சியும் ஊடுருவி விட்டது. “கருப்பு நிறம் கேவலமானது, வெள்ளைச் சருமமே சிறந்தது” போன்ற மடத்தனமான கற்பிதங்கள் மக்களின் மனதுக்குள் விதைக்கப்பட்டு, எளிய மக்களின் உழைப்பால் வந்த பணத்தை பன்னாட்டு நிறுவனங்கள் அறுவடை செய்துவருகின்றது. கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளை தனியார்மயமாக்கிவிட்டு, அரசாங்கமே சாராயக்கடை நடத்தி முப்பதாயிரம் கோடி ரூபாய் நாற்பதாயிரம் கோடி ரூபாய் என இலாபம் பார்த்துவருவது வெட்கக்கேடு. உண்மையில் இதனால் கிடைக்கும் இலாபத்தை விட, குடிப்பழக்கத்தால் ஈரல் கெட்டு, சிறுமூளை பாதிக்கப்பட்டு சாதாரண மக்கள் மருத்துவத்துக்காக செலவிடும் பணத்தைக் கணக்கிட்டால் அது ஐம்பதாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். "மது வீட்டுக்கு நாட்டுக்குக் கேடு" என்று எழுதிவிட்டு அதை விற்பதற்கு விற்பனைத் திட்டம் தீட்டும் அரசின் கீழ் நாம் வாழ்ந்து வருகிறோம். இதுபோன்ற செலவினங்கள், மக்களின் வருமானத்தை அட்டையாக உரிஞ்சுவதையும் நாம் எதிர்த்தாலன்றி நியாயமான வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இயலாது.  

8. மூடியிருக்கும் விரிந்த கண்கள்...
எனக்குப் பிடித்த திரைப்பட இயக்குனர், ஸ்டான்லி குப்ரிக்குடைய கடைசி படம் “eyes wide shut” (மூடியிருக்கும் விரிந்த கண்கள்). அழகான முரண்தொடை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள், நாம் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள், சண்டை போட்டுக்கொள்ளும் காரணங்கள், ஆசை பிடித்து அலையும் பொருட்கள் என எல்லாத் தன்மையிலிரும் இருக்கும் காணப்படாத அற்புத்தை நாம் தவறவிடும் அபத்தத்தை சொல்லியிருப்பார். நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் உண்மையான தன்மையை காண்பதற்கு நமக்கு பொறுமையே இருப்பதில்லை. எல்லாவற்றையும் மேம்போக்காக அணுகி குறிப்பிட்ட நிகழ்வு பற்றி உடனடி அனுமானத்தை நாம் நமக்குள் ஏற்றிக்கொள்கிறோம். இங்கிருந்து தான் பிரச்சனையே மையம்கொள்கிறது. என்னுடைய பணிச்சூழலிலும் நிறுவனமானது பெரிய காரணத்துக்காக குழுவின் பொதுப்பணத்தை வட்டாரத்துக்கு பிரித்தளித்தல், களஞ்சிய நிதிநிறுவனத்துக்கு பங்குத்தொகையை அளித்தல் போன்ற விஷயங்களை வலியுருத்தினாலும் சின்னச்சின்ன தவிற்கப்படக்கூடிய காரணங்களுக்காக நாம் அதில் அதிக ஆர்வம் காட்டாமல் வேறு வகையில் நம் கற்பிதங்களை சொல்லிக்கொள்கிறோம். இந்த போக்கு சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது. அனைவருக்கும் பொதுவான நன்மை என்பதை சிறுசிறு மனத்தடைகள் கரைத்துச்செல்வது துரதிருஷ்டமான விஷயம். விரிந்திருக்கும் கண்கள் உண்மையிலேயே உள்ளார்ந்த பார்வையை பெரும்போது தான் காணப்படாத அற்புதங்கள் புலப்படஆரம்பிக்கும்.

“மக்கள் பெரும்பாலும் காரணமற்றவர்கள், 
சுயநலமுடையவர்கள், தேவையற்ற ஆசைகள் உடையவர்கள். 
இருந்தாலும் அவர்களை மன்னியுங்கள்” 
சென்ற ஆண்டில் ஆம்பூர் களஞ்சியத் திட்டத்தில் பணியாற்றிய மூன்று இணையாளர்கள் நிறுவன முறைகளுக்கு கட்டுப்படாமலும் தான்தோன்றியாகவும் திரிந்ததால் அவர்களை பெருத்த வலியுடன் பணியிலிருந்து நீக்கினோம். நீக்கப்பட்டப் பின் அவர்கள் நம்முடைய குழுக்களிடம் நமது செயல்பாடுகள் பற்றியெல்லாம் மிகத்தவறாக எடுத்துச்சொல்லி நாம் ஆறு வருடங்களாக கட்டமைத்து வரும் குழுக்களை ஒரே இரவில் எதிர்மறையாக மாற்றினார்கள். சிறப்பாக செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட குழுக்கள் நம்மை தவறாக புரிந்துகொண்டன. அங்கு பணிபுரிந்த சதிஷ் மற்றும் மற்ற இணையாளர்கள் கூடுதல் நேரமெடுத்து அந்த எதிர்மறைக்குழுக்களை மீட்டனர். இப்போது 17 குழுக்கள் தவிர பிற குழுக்கள் நம்மைப் புரிந்துகொண்டுள்ளன. இந்த செயல்பாட்டில் உள்ளுர் வங்கிப் பணியாளரும் நமக்கெதிராக அக்கரையெடுத்து செயல்பட்டது பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆக்கப்பூர்வமாக செலவிடப்படவேண்டிய நமது சக்தி இதுபோன்ற பிரச்சனை தீர்ப்புக்கு பயன்படுத்தப்படும்போது சம்மந்தப்பட்டவர்கள் மீது கோபமும், விரக்தியும் ஏற்படுகிறது.

அதேபோல் வாலாஜா பகுதியில் சுலக்ஷனா என்ற பணியாளர், ஒரு குழுவின் வங்கித்தவணையில் சுமார் 75000 ரூபாய் தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி வந்தது அந்த குழுவுக்கு தெரிந்ததும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த குழு உறுப்பினர்கள் பெரிய குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி வருத்தப்படுகின்றனர். ஊருக்கு நல்லதைச் செய்ய நாம் செய்யும் செயல்பாட்டில் எங்கோ உள்ளக் குறைபாடுகளால் இது போன்ற துரதிருஷ்டமான சம்பவங்கள் நடந்துவிடுவது பல கேள்விகளை எனக்குள் எழுப்புகிறது.

“உலகத்துக்கு உங்களிடமிருக்கும் சிறந்ததைக் கொடுத்தாலும் 
அது நிறைவானதாக இருக்காது.
இருந்தாலும் உங்களிடத்தின் சிறந்ததை உலகத்துக்கு கொடுங்கள்”
மறுபக்கத்தில், காஞ்சி வட்டாரத்தின் ஒரு உறுப்பினர் நம்முடைய செயல்பாட்டால் கவரப்பட்டு தம்முடைய நிலத்தில் ஒரு பங்கை வட்டாரத்துக்கு தானமாக வழங்க முன்வந்திருப்பதும், திருவாலங்காட்டில் 10 வருடங்களுக்கும் மேலாக உறுப்பினர்கள் கலையாமல் இரண்டாம் தலைமுறையாக தமது களஞ்சியங்களை நடத்திவரும் 50க்கும் மேற்பட்ட குழுக்களும், பயிர் காப்பீடு போன்ற புதிய திட்டங்களை ஆக்கப்பூர்வமாக வரவேற்று மனமுவந்து ஒத்துழைத்த திருவாலங்காடு, பூண்டி வயலகத் தலைவர்களும் பெரிய நம்பிக்கையைத் தருகிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் காஞ்சி வட்டாரத்துக்கு பட்டறிவு பயணமாக வந்திருந்த 40க்கும் மேற்பட்ட ரிசர்வ் வங்கியின் பயிற்சி அதிகாரிகள் காஞ்சி வட்டாரத்தின் தலைவி, யோகாம்பாள் பேசிய ஒவ்வொறு வரிக்கும் வியந்து கைதட்டிப் பாராட்டினார்கள். நமக்கு சாதாரணமாகத் தெரியும் விஷயங்களை வெளியுலகினர் இப்படி வியக்கவே செய்கின்றனர்.

இப்படித்தான் வளர்ச்சிப் பணி இருக்கும் போல. தீதும் நன்றும் கலந்தே நமக்குக் கிடைக்கும். நமக்கு முன்னே நம்பிக்கை விரக்தி என இரண்டு பாதைகள் விரிந்திருக்கின்றன. நாம் நம்பிக்கையின் பாதையைத் தேர்ந்தெடுப்போம்.    
                     
9. சொல்லுக்கும் செயலுக்குமான தூரங்கள்...
இதுபோன்ற ஆற்றுப்படுதல் அறிக்கை, ஆண்டுத்திறனாய்வு அறிக்கை எழுதும் போதெல்லாம் என்னைச் சங்கடப்படுத்தும் ஒரு விஷயம் மெண்டரிங். கடந்த மூன்றாண்டாக மெண்டரிங் முறை நிறுவன அளவில் வலியுருத்தப்பட்டாலும், அதற்காக பல திட்டங்கள் ஆண்டின் தொடக்கத்தின்போது எடுக்கப்பட்டாலும் அதைச் செயல்படுத்துவதில் பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. நான் வழிநடத்தவேண்டிய சகதோழர்களுடன் இந்த ஆண்டு முழுமையாக ஒருமுறை கூட சந்திக்கநேரவில்லை. ஓரிருமுறை சந்திக்க திட்டமிட்டிருந்தாலும் அது கைகூடவில்லை. சில தொலைபேசி உரையாடல்கள், சில மின்னஞ்சல் பரிமாற்றம் ஆகியவை மட்டுமே நிகழ்ந்தது. வழக்கம் போல வரும் ஆண்டில் நெறிப்படுத்தி மெண்டரிங் முறையைக் கையாளுவேன் என்ற உறுதிமொழி மட்டும் இப்போது எடுத்துக்கொள்கிறேன்.

அதே போல இந்த ஆண்டு என்னுடைய வழிநடத்துனர் திரு.சிங்கராயருடன் இணைந்து பணிபுரிய அதிக வாய்ப்புகள் ஏற்படவில்லை என்றாலும் எப்போதெல்லாம் எனக்கு பணியில் சந்தேகம் ஏற்படுகிறதோ, ஆலோசனை தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவரை அணுகமுடிகிறது. அவரும் என்னை உற்சாகப்படுத்துவார், கருத்துக்களை பகிர்ந்துகொள்வார். இந்த ஆண்டு பஞ்சாயத்துத் திட்டத்துக்கு என்னுடைய பங்களிப்பு ஏறக்குறைய எதுவுமே இல்லை என்ற நிலையிருந்தபோதிலும் அவருடன் அவ்வப்போதான கலந்துரையாடலின் மூலம் நான் பஞ்சாயத்துத் திட்டத்தின் செயல்பாடுகள், முன்னேற்றங்களை அறிந்துகொள்வது மகிழ்ச்சி.

10. எம்மைச் சுமந்து செல்லும் காற்று...
என்னுடைய மண்டலப் பணியாளர்கள் பற்றி நிச்சயம் பெரிய பெருமை எனக்குள்ளது. சக்திவேல், சதிஷ், பாலமுருகன், உஷா ஆகிய நால்வரும் கணக்காளர் நிலையிலிருந்து ஒரு வட்டாரத்தை முழுமையாக நிர்வகித்து வருகின்றனர். நல்ல முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இதில் சக்தியும் சதிஷ்ம் மற்ற வட்டாரங்களுக்கும் ஆலோசனை வழங்கி மண்டலத்தின் செயல்பாடுகளில் பங்கெடுப்பது மகிழ்ச்சியான விஷயம். பாலமுருகன் நமது நிறுவனத்துக்கு புதிய நபராக இருந்தாலும் காஞ்சி வட்டாரத்தில் தோய்வாக இருந்த பல விஷயங்களை முன்னெடுத்து செய்து காஞ்சி வட்டாரத்தின் மேம்பாட்டுக்கு நல்ல பங்களிப்பை தந்துள்ளார்.
துரைமுருகன், திருவாலங்காடு வயலகத்துக்கு பொறுப்பெடுத்தப்பின் பால் உற்பத்தியாளர் குழு அமைத்தல், பயிர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியது என பல புதிய செயல்பாடுகளையும் முறைமைகளையும் சொந்த விருப்பத்துடன் எடுத்து செய்வது ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது. எங்களுடைய மண்டல வாகன ஓட்டுனர் தினகரனுடைய ஒத்துழைப்பு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது. அவருடைய சொந்த பிரச்சனைகளையும் தாண்டி தொலைதூரத்தில் பணியாற்றினாலும், மூன்று மாவட்டங்களில் பரந்துள்ள எங்கள் மண்டலத்தின் அலுவலக, களப்பணிகளுக்கு அவருடைய ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோல் புதிதாக பணியில் சேர்ந்துள்ள சத்யா, ராஜா, சங்கீதா ஆகியோரின் ஆர்வமும் பணித்திறமும் உற்சாகமூட்டுவதாகவே அமைந்துள்ளது.

நமது நிறுவனமே மனிதவள நிறுவனமாக இயங்கும் சூழலில், என்னுடைய மண்டல பணியாளர்களின் திறனை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வதும், ஊக்கத்துடன் செயலாற்ற சிறப்பான பணிச்சூழலை ஏற்படுத்துவதும் என்னுடைய மிகமுக்கிய பணியாக கருதுகிறேன். வரும் ஆண்டில் காலியாக உள்ள சில பொறுப்புகளுக்கு புதிய பணியாளரை நியமித்து வளர்ச்சி செயல்பாடுகளை முன்னெடுத்துச்செல்வோம்.

11. காலத்தின் மீதான பயணம்...
ஒருமுறை செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் வந்துகொண்டிருக்கும் போது டிக்கெட் வாங்க 50 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். “சார், நீங்க கொடுத்த 50 ரூபாய் நோட்டு கிழிஞ்சியிருக்கு. வேற கொடுங்க” என்று பஸ் கண்டக்டர் சொன்னபோது, வேற பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். இரண்டு நாளைக்கு முன் எதோ ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சில்லரை வாங்கும் போதுஅந்த கிழிந்த 50 ரூபாய் நோட்டு என்னிடம் சேர்ந்துவிட்டது. பஸ்ஸில், டீக்கடையில், ஒரு பெயிண்ட் கடையில் ஐந்து இடங்களில் இதை மாற்றுவதற்காக கொடுத்துப்பார்த்தேன். மிகச்சரியாக திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஹட்ச் நாய்க்குட்டி போல என்னை விட்டு பிரியாமல், மாற்றிக்கொள்ள முடியாத அந்த கிழிந்த 50 ரூபாய் நோட்டு எனது பர்சில் கனத்து பெரிய பாரமாக இருப்பது போல் இருந்தது. காஞ்சிபுரம் வந்தபிறகு, பஸ் ஸ்டாண்டின் ஓரத்தில் சாத்துக்குடிகளை வைத்து விற்றுக்கொண்டிருந்த கிராமத்துப் பெரியவர் கண்ணுக்குத் தெரிந்தார். பழம் வாங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லையென்றாலும் இந்த 50 ரூபாயை மாற்றுவதற்காக பழத்தை வாங்கினேன்.  5 பழம் 40 ரூபாய் என்றார். வாங்கிக்கொண்டு கிழிந்த 50 ரூபாயை கொடுத்தேன். 10 ரூபாயை திருப்பிக்கொடுத்தார்.அவர் கண்டுபிடிப்பதை தவிர்க்க வேகமாக அங்கிருந்து வெளியேறினேன். பத்து அடி தள்ளிப் போன பிறகு, மனம் உறுத்தியது. திரும்பிப்பார்த்தேன். வேறு ஒருத்தருக்கு பழத்தை விற்றுக்கொண்டிருந்தார். மீண்டும் அவரிடம் சென்று, “அய்யா, நான் கொடுத்த 50 ரூபாயைக் கொடுங்கள். வேற ரூபாய் தர்றேன்” என்று அதை மாற்றிக்கொண்டேன். கிழிந்த 50 ரூபாயை வழியில் இருந்த பிள்ளையார் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு நடந்தேன். என்மீது எனக்கு வெட்கமாக இருந்தது.

இது தான் நான். முழுமையான புனிதத்தன்மையுடன் வாழ்க்கையை நடத்தமுடிவதில்லை. சரியும் தவறும் இணைந்தே வாழ்க்கை ஓடுகிறது. நான் தவறு செய்யும்போது எனக்கும் இருக்கும் சுயம் தரும் உறுத்தல் என்னை கண்டிக்கிறது. இதுபோன்ற சுயம் சார்ந்த பரிசோதனைகளே என்னைச் செதுக்கிவருவதாக உணர்கிறேன்.

தற்போது நான் என்னுடைய சொந்த ஊரில் இருந்து இயங்குவதால் குடும்ப அளவிலான சில சிக்கல் தீர்ந்து அமைதி ஏற்பட்டுள்ளது. என்னுடைய பெற்றோருக்கு உதவியாய் இருப்பதும், அவர்களுடன் நேரம் செலவிடுவதும் ஆத்மதிருப்தியை தருகிறது. ஆனால் இங்கு எனது பணியின் தன்மை முன்பிருந்ததை விட இருமடங்காகியுள்ளது. எப்போதும் செய்துமுடிக்கவேண்டிய பணிகள் அதற்கான காலஅளவைத் தாண்டி என்னை அழுத்தப்படுத்தும். எனது பணியினை சீரமைத்துக் கொண்டு முறைப்படி திட்டமிட வேண்டினாலும், இயல்பாக அடுத்தடுத்து வரும் பணிகள் எதையும் யோசிக்கவிடாமல் என்னை இழுத்துச்செல்கிறது. கடந்த ஒரு வருடமாகவே எனது பணி, பயணங்கள் நிறைந்ததாக இருந்து வருகிறது. இருந்தாலும் மக்களுடன் நேரடியாக பணியாற்றுவதும் களஞ்சியம் வயலகம் என இருதிட்டங்களும் இணைந்த, மண்டல அலகை ஒருங்கிணைப்பதும் பெரிய மகிழ்ச்சியை தருகிறது.

இயல்பாகவே எனக்கு அணியாக இணைந்து திட்டத்தை செயல்படுத்தும் வேகம் குறைவு. தனிஆளாக எந்த வேலையையும் சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் என்னுடைய முன்-அனுமானங்கள் பெரிய தடைகளாகவும் இருந்துள்ளன. வரும் ஆண்டில் மண்டலத்தை செயல்பாட்டில் முதன்மைப்படுத்துவது, அகடமி பணிகளில் என்னுடைய தீவிரத்தை வளர்த்துக்கொள்வது, பஞ்சாயத்துத் திட்டத்தின் விரிவாக்கத்துக்கு உதவுவது ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும்.

12. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி...
ஒரு சோம்பலான ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளையில், வீட்டில் என்னுடைய அலமாரியை சுத்தம் செய்துகொண்டிருந்தேன். அப்போது இடுக்கில் ஒளிந்திருந்த என்னுடைய கைபேசியின் விளக்கக்புத்தகத்தை காணமுடிந்தது. என்னுடைய கைபேசியை வாங்கியவுடன் அப்புறம் படிக்கலாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டு மறந்தே போனது நினைவுக்கு வந்தது. இப்போது அதை எடுத்துப் படித்தபோது, சுமார் 200க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை என்னுடைய கைபேசி கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவற்றில் 10 செயல்பாடுகளை மட்டுமே நான் செய்துவந்துள்ளேன். தொலைபேசி அழைப்பு, சிறு செய்திகள் அனுப்புதல், பாட்டு கேட்டல், சில சமயங்களில் காலண்டரைப் பார்த்தல், பயணப்படிவத்தை பூர்த்தி செய்வது போன்ற சமயங்களில் கால்குலேட்டரை திறத்தல், இது போன்ற செயல்களுக்குத்தான் நான் என்னுடைய கைபேசியை பயன்படுத்திவருகிறேன். ஆனால் பயன்படுத்தப்படாத அப்ளிகேஷன்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதை அறியும் போது சுவாரசியமாக இருந்தது. பிறகு ஒவ்வொறு செயல்பாடாக என்னுடைய கைபேசியில் செய்துபார்க்கும் போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். சாதாரண கருவியைப் பற்றிய என்னுடைய புரிதலே இந்த நிலையில் இருந்ததென்றால், என்னுடைய மனதில் பயன்படுத்தப்படாத பக்கங்களைப் பற்றி யோசித்தபோது மலைப்பாக இருந்தது. புத்தமதம் சொல்வதைப்போல நான் எனக்குள் பிரபஞ்சத்தைத் தூக்கித் திரிகிறேன். அந்த மனநிலையே யோசிக்க யோசிக்கத் தான் புலப்படுகிறது.

வாழ்க்கை தொட்டனைத்து ஊறும் மணற்கேணியைப் போலத் தான் இருக்கிறது. மணலினைத் தோண்டத் தோண்ட ஊற்றெடுக்கும் நீரைப்போல, மனதைத் தோண்டத் தோண்டத்தான் உள்ளுக்குள் ஆழ்ந்திருக்கும் திறனும், புரிதலும் ஊற்றெடுக்கிறது. அந்த புரிதலே மனதைத் தோண்டிச்செல்லும் பக்குவத்தைத் தருகிறது. மணற்கேணியாய் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் போது, தேவையற்ற எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் தவிற்கப்படுகிறது. அதுவே அமைதியைத்தந்து பிரபஞ்சத்தையே தாங்கும் சக்தியை நமக்களிக்களித்து நம்மை மேம்படுத்துகிறது.

நன்றி.

2009: பொங்குமாக்கடல்


“புதல்வா, அந்த ஆலமரத்தின் கனியைக் கொண்டு வா”
“இதோ தந்தையே...”
“அதைப் பிளந்துபார், என்ன காண்கிறாய்?”
“அணுநிகர் விதைகள் தந்தையே...”
“விதையினைப் பிளந்து பார், என்ன காண்கிறாய்?”
“விதைக்குள் ஒன்றுமில்லையே...”

“...நீ இங்கு காணாது போன நுண்மையே, இந்த மாபெரும் ஆலமரமாக ஆகியுள்ளது;
இப்பிரபஞ்சமாய் வியாபித்துள்ளது; நமக்குள் நிறைந்திருக்கிறது!”
- சாந்தோக்ய உபநிடதம்



இந்த அறிக்கையை எழுதும்போது அறிந்தே 2 விதிமீறல்களை செய்ய நேர்ந்தது. நிறுவனத்திலிருந்து டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆற்றுபடுதல் அறிக்கையை தரவேண்டும் என்ற கடிதம் வந்திருந்தும் இன்று, ஜனவரி 1ம் தேதிக்குத் தான் இதை எழுதவே ஆரம்பிக்கிறேன். எப்போது முடிப்பேன் என்று தெரியவில்லை. இப்போது கூட யதேச்சையாகத் தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். மார்கழி மாதமென்பதால் எனது ஊர், காலை 5 மணிக்கெல்லாம் விழிக்க ஆரம்பித்துவிட்டது. ஒலிப்பெருக்கியின் சுப்ரபாதத்தால் எனது தூக்கம் கெட்டது. தூக்கத்தைத் தொலைத்த நான், எனது ஆற்றுப்படுதலை மீட்டெடுக்க இந்த அறிக்கையை எழுதும் பணியில் ஈடுபட நேர்ந்தது. ஏன் என்னால் நிறுவனத்திடமிருந்து வந்த கடிதத்துக்கு மதிப்பளிக்க முடியவில்லை? கூடுதல் பணிகள், நேரமின்மை என பல காரணங்களை எனக்கு சொல்லிக்கொண்டாலும், எனது காலதாமதத்தை எந்த குற்ற உணர்வுமில்லாமல் இயல்பாக எதிர்கொள்வது சரியெனப்படவில்லை. அரசுத்துறைகளில் இது போன்ற விதிமீறல், கடுமையான விளைவுகளைத் தரும். நிறுவனம் சார்ந்த, சுயக்கட்டுப்பாட்டுக்கும் சுதந்திரத்துக்கும் இடையேயான முரண்பாடுகள் பல நேரங்களில் அடிப்படைக் கேள்விகளை எழுப்புவதை தவிர்க்கமுடியவில்லை. இந்தப்போக்கு, மக்களாட்சியின் மிக முக்கியமான குறைபாடாகும். பெரும்பான்மையினர் செய்யும் தவறுகள், சகித்துக்கொள்ளப்படும் போது அது அச்சமுகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கலாச்சாரமாகவே மாறிவிடுகிறது.

அடுத்த விதிமீறல், எனது அறிக்கைக்கான மொழி. ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பின்னும், தமிழை நான் தேர்ந்தெடுத்துக்கொண்டது. இது எனது விருப்பத்துடன் நிகழ்ந்தது. வருடம் முழுவதும் பல கட்டாய தேவைகளுக்காக 100க்கும் குறையாத பக்கங்களை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டியுள்ளது. குறைந்தபட்சம், இந்த ஆற்றுப்படுதல் அறிக்கை தமிழில் அமையும் போது, என்னால் என்னை இயல்பாக வெளிப்படுத்தமுடிகிறது. உள்ளுக்குள் உற்சாகமும் உண்மையாக ஆற்றுப்படுதலும் ஏற்படுகிறது. மேலும் இம்மாதக்கடைசியில் எங்கள் மண்டலத்தைச்சேர்ந்த வட்டாரங்களுக்கு நிறுவனப் பண்பாட்டு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த சமயத்தில், எனது தமிழறிக்கை பயன்படும். அதனால் சற்றே உரிமையுடன் இந்த முறையும் தமிழில் எனது எண்ணங்களை மொழிப்பெயர்கிறேன்.

பெருங்கனவின் சிறுதுளி...
காலத்தைவிட காலம் வேகமாக நகர்கிற இச்சூழலில், நமது வாழ்க்கைக்கான வெளிச்சத்தைத் தரும் அனுபவங்கள் மூன்றாவது உலகத்திலிருந்து வருவதில்லை. நம்மைச்சுற்றி நிகழும் ஒவ்வொறு நிகழ்வும் ஏதோ ஒருவகையில் நமக்கான செய்தியைத் தாங்கித்தான் வருகின்றன. சென்ற வாரம் ஒரு மாலைப்பொழுதில், ஒரு பேக்கரி கடையில் இனிப்புகளை வாங்கிக்கொண்டிருந்தேன். கடையின் ஓரத்தில் பூச்சிகளைக் கொல்லும் மின்சார விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு முன் அக்கருவியை பல முறை, பல இடங்களில் பார்த்திருந்தாலும் அன்று அது என் கவனத்தைக் கவர்ந்தது. நான் அதனை கவனித்துக்கொண்டிருந்ததைக் கவனித்த கடைகாரர், “இந்த விளக்கு ரொம்ப நல்லா வேலை செய்யுது சார். முன்னாடி பூச்சித் தொல்லை தாங்கமுடியாது” என்றார். மனிதர்கள் தமது சுகவாழ்க்கைக்காக மற்ற உயிரினங்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. பூமியில் இருக்கும் உயிரினங்களில், மனிதன் மட்டுமே உலகத்துக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளாமல், தனக்கு ஏற்றார்போல் உலகத்தை மாற்ற நினைக்கிறான். இந்த மனநிலை தான் நமது எல்லாப்பிரச்சனைக்கும் அடிப்படைப்புள்ளி.

உலகமெல்லாம் வலிமையுள்ளவனின் பெருங்கருணையினால் மட்டுமே சிறுபான்மை மக்களின் வாழ்க்கை நீடித்திருக்கும் நிலை பெரும்பாவம். இலங்கையில் சிறுபான்மை தமிழரின் வாழ்க்கை மீது வலிமையும் அதிகாரமுள்ள சிங்களவர் முடிவுகளெடுப்பதும் அவர்கள் மீதான வன்கொடுமையும் இந்தியாவுக்கு கீழே சிறு கண்ணீர்த்துளியாய் அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் உயிர்ச்சமநிலைக்கு விரோதமானது. முற்றிய இலவம்பஞ்சு வெடிக்கும் போது, காற்றின் போக்கில் பரவிச்செல்லும் பஞ்சினைப் போல இலங்கையின் தமிழ் மைந்தர்கள் உலகமெலாம் அகதிகளாக விரட்டப்பட்டது அயோக்கியத்தனம்.

நான் பணிபுரியும் திருவாலங்காடு வட்டார களஞ்சியத்தின் வட்டார செயற்குழு உறுப்பினரில் பத்மினி என்பவர் இலங்கை அகதி. அற்புதமான பெண்மணி. தாமே முன்வந்து வட்டாரப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்பவர். அவர் சார்ந்திருக்கும் பகுதிக்கு இணையாளர் கிடைக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக, இவர் எந்த எதிர்பார்ப்புமின்றி அந்தப் பகுதியை சேர்ந்த குழுக்களின் கூட்டங்களை தாமே முன்வந்து நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் சிதறியுள்ள அவரது பிற உறவினர்களை சந்திக்க அடிக்கடி வெளியூர் சென்று வருவார். அவரது குடும்பம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு குடிலமைத்து வாழ்ந்து வந்தாலும், இதுவரை அவர்களுக்கு நிலஉரிமை வழங்கப்படவில்லை. “மரங்கள் ஓய்வை விரும்பினாலும்; காற்று சும்மா இருப்பதில்லை” என்பதைப்போல், அவருக்கு நமது தேசம் அமைதி தராவிட்டாலும், தொந்தரவு செய்யத் தவறுவதில்லை. தற்போது அவர் இருக்கும் இடத்திலிருந்து அவரது குடும்பத்தை அப்புறப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர் குடும்பம் யாரிடம் உதவிகேட்டு நின்றாலும், இரண்டாம்தர குடிமகனாக நடத்தப்படுகின்றனர். இலங்கைத்தமிழர் நம்மைச்சுற்றி விதைகளாக விழுந்து கிடந்தாலும், இன்னும் நமது மண்ணில் வேர்பிடிக்க முடியாத சூழல் வேதனைக்குறியது.

திருவாலங்காடு, பொது நேர்மை பற்றிய மிகச்சிறந்த நிகழ்வைத் தாங்கியுள்ள அற்புதமான கிராமம். 600 ஆண்டுகளுக்கு முன்னால் அடைக்கலம் தேடிவந்த ஒருவனின் உயிருக்கு திருவாலங்காட்டைச் சேர்ந்த பழையனூர் கிராம மக்கள் உத்திரவாதம் கொடுத்தனர். ஆனால் அடைக்கலமாய் வந்தவரின் உயிரைக் காக்கமுடியாமல் போனதால் ஊரிலுள்ள 64 குடும்பங்களின் தலைவர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் தீ வைத்து அனைவரும் தமது உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்கள் தீ வைத்துக் கொண்ட இடம், நீலிக்கோவில் ஆகியவற்றின் படிமங்களைத் தேடி நானும் தங்கபாண்டியனும் சென்ற போது பெய்த பெருமழையும் கடுங்காற்றும் இன்று நினைவுக்கு வருகிறது. யாரோ முகமறியாத நபருக்கு ஊரே உயிரைக் கொடுத்த பண்பு நீர்த்துப்போய் வருவது பாரம்பரியத்தின் மீதான கரையாகும்.                        

மக்களைப் போற்றுதும்...
உண்மையில் திருவாலங்காட்டில் களஞ்சியத் திட்டத்தில் பொறுப்பெடுப்பதற்கு முன்னால் எனக்கு குறுநிதித்திட்டத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. நான் இங்கு சேர்ந்த முதல் மாதத்தில் தொடர்ச்சியாக பகுதி மகாசபை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் நான் சந்தித்த நிகழ்வுகள், மக்கள் களஞ்சிய அமைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் உடைமையையும் எனக்கு போதித்தது.

கனகம்மாசத்திரம் பகுதி விழாவின் போது, ஒரு உறுப்பினரின் மகன், முளைப்பாரியை அலங்கரிக்க பூக்கள் எடுத்துவர தோட்டத்துக்கு சென்ற போது பாம்பு கடித்துவிட்டது. அந்த நிலையிலும், அவர் தமது மகனை உறவினர்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு நமது பகுதிவிழாவில் கலந்து கொண்டார் என்பதை அவருடன் உரையாடியபோது தெரிந்ததும் எனக்கு சிலிர்த்தது. நிச்சயம் என்னால் அது போன்ற சூழலில் அவரைப்போல் இருந்திருக்க முடியாது. அவருக்கு இந்த நம்பிக்கையும் சக்தியையும் கொடுத்தது எதுவெனப் பார்த்தால், நமது களஞ்சியத்தின் கண்ணுக்குத் தெரியாத சக்தி விளங்கும்.

இதேபோல், லட்சுமாபுரம் பகுதியின் விழாவின் போது பந்தல் அமைக்க பணியாளர்கள் வராத நிலையிலும், களஞ்சிய பொறுப்பாளர்களே அதிகாலையிலிருந்து பந்தல் அமைத்து சிறு காயங்கள் பட்டது, சின்னம்மாபேட்டை பகுதி விழாவின் போது 100 பேர் மட்டுமே அமரக்கூடிய சமுதாயக்கூடத்தில் மின்சாரமில்லாமல் 300க்கும் குறையாத உறுப்பினர்கள் வேர்வை சொட்டச்சொட்ட நிகழ்ச்சி முடியும் வரை அமைதி காத்தது, நெமிலிப்பகுதியில் டேப்ரிக்காடரில் இசைத்த களஞ்சியப்பாடலுக்கு டயனாஸ்டிக் மனநிலையில் 50 வயதுக்கும் மேற்பட்ட களஞ்சிய உறுப்பினர்கள் சிலர் தம்மை மறந்து ஆடிமகிழ்ந்தது என வட்டாரம் நடத்திய 8 பகுதிவிழாக்களும் எதாவது ஒரு நற்செய்தியை, மக்களின் ஆற்றலை எனக்கு உணர வைத்தது.

உண்மையில் திருவாலங்காடு வட்டாரத்துக்கு மதுரையை சுற்றியிருக்கிற வட்டாரங்கள் நிறுவனத்திடமிருந்து பெற்ற உதவிகளை விட மிகக் குறைவான உதவிகளே வந்துள்ளது. கண்மாய் பாசனத்தில், கடைக்கோடி வால்பகுதியிலுள்ள நிலத்துக்கு நீர் எப்படி குறைவாகப் போய்ச்சேறுமோ அதேபோல், தமிழ்நாட்டின் வடக்கு மூலையில் உள்ள இந்த வட்டாரத்துக்கு சென்ற ஆண்டு நமது நிறுவனக் காலெண்டர் கூட வந்து சேரவில்லை. இந்த வட்டாரம், வங்கியிணைப்பு, குடிமைத்திட்டங்கள் என பல விதங்களில் சராசரியைவிட பின்தங்கியே இருக்கிறது. இந்த நிலையிலும் மக்களிடம் மனவெழுச்சியையும், நன்நம்பிக்கையையும் விதைத்ததில் களஞ்சிய பணியாளர்களின் பங்கு மகத்தானது. இந்த வட்டாரத்தின் 8 பணியாளர்களில் 5 பேர் 9 வருடத்துக்கும் மேல் பணிபுரிபவர்கள். தானம் அறக்கட்டளைப் பணியாளர்கள் இங்கு இல்லாத நிலையிலும் வட்டாரத்தை உயிர்பிடிக்க வைத்ததில் இவர்களின் பங்கு சத்தியமானது.

இந்த அனுபவங்களையெல்லாம் காணும் போது, எனக்கு மக்களின் மீது நம்பிக்கை பிறக்கிறது. நாம் செய்வதை செம்மையாகச் செய்தால், மக்கள் நம்மைக் கொண்டாடுவார்கள். சமுகம் நமது எல்லா கேள்விகளின் ஊற்றுக்கண்ணாகவும், விடையாகவும் அமைந்திருப்பதை உணரமுடிகிறது. நிறுவனம் பற்றி தவறான எண்ணங்கள், வதந்திகள், தேவையற்றப் பேச்சுக்கள் ஒளியின் வேகத்தில் பரவும் அதே சமயத்தில் நமது சாதனைகள், மக்களின் ஆக்கப்பூர்வ மதிப்பீடுகள், வளர்ச்சிக்கு நாம் செய்து வரும் பங்களிப்புகள் நத்தையின் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ஈரானில் சென்ற வருடத்தின் ஒருநாளில், தீவிரவாதத் தாக்குதலால் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் அடுத்த நாள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஈரான் குடிமகன் ஒருவர் தமது சமுகப்பணிக்காக தேசியவிருது பெறும் நிகழ்வு படத்துடன் இடம்பெற்றிருந்தது. தேசத்தை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல் 3வது அல்லது 4வது பக்கத்தில் அச்சிட்டிருந்தனராம்.

இந்த செய்தி எனக்கு முக்கியமானதாகப்பட்டது. மனிதன் நம்பிக்கையிழக்கும் போதும், பயம் அவனை ஆட்கொள்ளும்போதும் நல்லெண்ணத்தை விளைவிக்கும் நற்செய்தியை முக்கியத்துவப்படுத்துவது அவசியமெனப்படுகிறது. நற்செய்தி மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். மாறாக பிரச்சனைகளை, தவறுகளை பெரிதுபடுத்தி அதையே பரப்பும் போது, நமது சக்தி நீர்த்துப்போவதை தவிர்க்கமுடியாது. மக்களைப் போற்றுவோம். நமது நிறுவனப்பெருமை குறித்தும், பங்களிப்பு குறித்தும் பெருமிதம் கொள்வோம். நல்ல செயல்களை வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் உரத்து கூறுங்கள். குளத்தில் எறிந்த கல்லைப்போல சமூகத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் அலையாய் பரவிச் செல்லட்டும். தவறு மற்றும் பிரச்சனைகள் பற்றி விளக்கமுற்படாமல் அதைத் தீர்க்கும் முயற்சிகளில் சிறு பங்கினையாவது எடுப்போம்.

மனிதன் படைத்தக் கடவுள்...
கடந்த 4 ஆண்டுகளாக நான், கிரண் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோர் வருடத்துக்கு ஒருமுறை 2 - 3 நாட்கள் தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாய் அதிகம் அறிப்படாத சிவஸ்தலங்களுக்கு சென்று வருகிறோம். இந்தப் பயணம் உள்ளார்ந்த புத்துணர்ச்சியையும் சுயம் சார்ந்த ஆற்றுப்படுதலையும் எமக்கு தருகிறது. கடந்த 2 நாட்கள், திருவாரூர் பக்கமுள்ள சில கோவில்களுக்கு சென்றுவந்தோம். திருமுக்கூடல், கோவில்வன்னி போன்ற 1000 வருடங்கள் பழமையான, பாடல்பெற்ற, பெரிய மகான்கள் வந்து சென்ற, இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆறுதலளித்த கோவில்கள் இன்று விளக்கு எரிக்கக்கூட எண்ணெய் இல்லாமல் முற்றாக சிதிலமடைந்து இருப்பதைக் காணும் போது பெருஞ்சோகம் ஏற்படுகிறது. ஒருகாலத்தில் உள்ளூர் மக்களின் உழைப்பால் கட்டப்பட்ட கோவில்களில் இன்று மக்கள் தினசரி வருவது கூடக் கிடையாது. கோவில் பராமரிப்பில் உள்ள அரசியல் தந்திரங்கள் மக்களாட்சி மீது விரக்தியை தந்தன.

இந்த சமயத்தில் எனக்கு டெல்லியில் உள்ள சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பில் கட்டப்பட்ட சுவாமி நாராயணா கோவில் ஞாபகம் வருகிறது. 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் வாழ்ந்த ஒரு நாராயணன் என்ற முற்றும்துறந்த துறவியின் பற்றற்ற வாழ்க்கைப் போதனைகளை நமக்கு எடுத்துச்சொல்ல இது போன்ற ஆடம்பரம் தேவைப்படுகிறது. அந்தக் கோவிலில் இருந்தபோது, அமைதிக்கு பதிலாக காரணமறியாத வெறுமை தான் எனக்கு ஏற்பட்டது. 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை பாதுகாக்க ராணுவ பகுதியில் நுழைவதற்கு செய்யப்படும் சோதனைகளைப் போல் பல கட்டங்களில் பல வித ஆய்வுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படும் போது, இந்த பணத்தைக்கொண்டு எத்தனை குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிசெய்திருக்க முடியும், எத்தனை குழந்தைகளுக்கு கல்வி தந்திருக்க முடியுமென்று மனது கணக்கிட்டது. வாழ்க்கைக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தரவேண்டிய எளிமையான ஆன்மீகம், கண்முன்னே வர்த்தகமாக்கப்பட்டு; பின் அரசியலாக்கப்படும் போக்கு வேதனையாக உள்ளது.

மக்களால் மக்களுக்காக...
நமது நிறுவனம் இந்த ஆண்டை அடித்தள மக்களாட்சியை மையமாகக் கொண்டு செயல்படவிருப்பதை அறிந்தேன். நான் உள்ளாட்சித்துறை சார்ந்து செயல்பட்டு வருவதால் மக்களாட்சித் தத்துவம், அதன் போக்குக் குறித்து அடிக்கடி சிந்திப்பதுண்டு. இன்றைய தேதிக்கு நமது தேசத்தில் மக்களாட்சி செத்துவிடவில்லையென்றாலும் தீவிரச்சிகிச்சைப் பிரிவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமது கட்சிக் கரை வேட்டியை மாற்றிக்கட்டிக்கொள்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தேர்தல் நடத்திய வித்தியாசமான ஜனநாயகம் நமது ஜனநாயகம்.

உண்மையில் மக்களாட்சி என்பது நல்ல நிர்வாகத்துடனோ நற்செயலுடனோ தொடர்புடையது அல்ல. அது, உள்ளூர் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளை சார்ந்த மக்கள் ஆமோதிப்புடன் கூடிய நிர்வாக முறை. எல்லா மக்களும் பணத்தை வாங்கிக்கொண்டு தான் ஓட்டு போடுவோம் என ஒத்துக்கொண்டால், அதனை கொள்கையளவில் சரியான மக்களாட்சி முறையாகத் தான் கருதவேண்டும். எல்லாக் கட்சியிலும் அதிகாரப்பொறுப்பில் இருக்கும் குடும்பங்களுக்குள்ளேயே அதிகாரம் மேலும் குவிக்கப்பட்டு வரும் போக்கு மன்னராட்சியின் மறுவார்ப்பாக மாறி வருகிறது. ஊடக பலம், பண பலம், ஆள் பலம் இருந்தால் இந்த மக்களாட்சியில் எதுவும் செய்ய முடியும் என்றாகிவிட்ட இந்தச் சூழ்நிலையில் மக்களாட்சி பற்றிய சரியான புரிதலை மக்களிடம் விதைக்க வேண்டியது நமது கடமை. ஒரே கத்தி, கொள்ளைக்காரனிடம் இருந்தால் உயிரை எடுக்கவும், மருத்துவரிடமிருந்தால் உயிரைக் காக்கவும் பயன்படுபவதைப்போல, நேர்மையும் நல்லெண்ணமும் கொண்ட சமூகத்தில் மக்களாட்சி முறை பெரும்பயன் தரும். அதனை உறுதி செய்வதில் நமக்கிறுக்கும் பொறுப்பை வரும் ஆண்டு உணர்த்தும் என எண்ணுகிறேன்.  

பொங்குமாக்கடல்...
ஒருமுறை ஆசைத்தம்பியின் வீட்டுக்கு சென்றபோது, சாத்வீகா (அவர்களது குழந்தை), என்னிடம் வந்து எனது பேனாவினை எடுத்துக்கொடுத்து தனது உள்ளங்கையில் ஆட்டுக்குட்டியின் படத்தை வரையுமாறு சொன்னாள். நானும் தலை, உடல் வால் என்று அந்தச் சின்னக்கையில் ஆட்டினுடைய படத்தை வரைந்தேன். நான் வரைந்த படத்தைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவள், இது ஆட்டுக்குட்டியில்லை, கோழி என்று சொல்லிவிட்டு அதனை மற்றவருக்குக் காட்ட ஓடினாள். எனக்கு ஆடுபோல் தெரிந்த அந்தப்படம் அவளுக்கு கோழியாக தெரிந்திருக்கிறது. 3 வயது குழந்தையின் பார்வையும் எனது பார்வையும் வேறுபடுகிறது என்றால், இந்த ஜனத்திரளின் கருத்து வேறுபாடுகளுக்கு அளவேது. எல்லா நிகழ்வுகளும் வெற்றிகளும் தோல்விகளும் நதியைப்போல வெளியிலிருந்து அனுபவமாய் மனக்கடலுக்குள் கலக்கிறது. மனக்கடல் அனுபவங்களின் வாயிலாக பொங்கியடங்குகிறது. கீதை, பரம்பொருளை கடலாகவும் உயிரினத்தை நதியாகவும் உருவகப்படுத்தியிருக்கும். எப்படி நதி கடலுடன் கலந்து தனது தன்மையை இயல்பாக மாற்றிக்கொள்கிறதோ அதேபோல் வெளி அனுபவங்கள் மனமென்னும் பொங்குமாக்கடலில் கலந்து சிறு அலைகளாக, ஆழிப்பேரலையாக எனது செயல்பாடுகளின் வழியே வெளிப்பட்டு நன்மையையும் சிதைவையும் ஒருங்கே தருகின்றன. “தாமே தமக்குச் சுற்றமும்; தாமே தமக்கு விதிவகையும்” என்ற மாணிக்க வாசகம் மட்டுமே உண்மையென உள்ளம் உரத்துக்கூறுகிறது.

*******************
களவாடிய பொழுதுகள்...
என்னுடைய பெயர் ஜானகிராமன். திருவள்ளூர் மாவட்டத்தில் தானம் அறக்கட்டளைப் பணிகளை ஒருங்கிணைத்தும் பஞ்சாயத்து திட்டத்தின் திட்டஅணி உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் எனது சொந்த ஊர் திருத்தணி. அப்பா, எங்கள் ஊரில் உள்ள நிலவள வங்கியில் செயலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அம்மாவும் எனது மனைவியும், வீட்டுப் பணிகளை நிர்வகித்து வருகின்றனர். எனது ஒரே தம்பி, சென்னையில் வழக்கறிஞராக இருக்கிறான். இந்த சிறிய குடும்பம் எனக்களித்துள்ள அன்பும், என் மீதான நம்பிக்கையும், அவர்கள் எனக்களித்த சுதந்திரமும் மிகப்பெரியது.

மருந்தியல் பட்டத்திற்குப் பின் அரசுப்பணி ஆர்வத்தினால், இந்திய குடிமை பணிகளுக்காக என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். கூடவே அஞ்சல் வழியில் பொது நிர்வாகத்தில் முது நிலை பட்டப்படிப்பையும் முடித்தேன். தொடர்முயற்சியின்மையினால் குடிமைப் பணியில் நான் தேர்ச்சிப்பெற முடியவில்லை. ஆனால், அந்த காலக்கட்டத்தில், நான் படித்த, கற்றுக் கொண்ட பல விஷயங்கள், எனக்குள் ஓர் பரவலான அறிவுத்தளத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்திய அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த அறிவு விரிவானது. அந்த சமயத்தில் டாடா - தான் அகடமியின் அறிமுகம், தன்னார்வத் துறை பற்றிய வாசலைத்திறந்து வைத்து வளர்ச்சி மிகச்சரியான புரிதலை எனக்குள் ஏற்படுத்தியது. அகடமியில் படித்தப்பிறகு பஞ்சாயத்து திட்டத்தின் வத்தலகுண்டு கள அலுவலகத்தில் 3 ஆண்டுகள், பஞ்சாயத்து திட்ட அலுவலகத்தில் 3 ஆண்டுகள், தற்போது திருவாலங்காட்டில் 6 மாதங்கள் என பணியாற்றி வருகிறேன்.

எனக்கு புத்தகம் பிடிக்கும். பள்ளி காலத்தில் கல்கியுடைய சரித்திர நாவல்களை இரவு பகல் பார்க்காமல் படித்து என்னை நானே வந்தியத்தேவனாகவும் நரசிம்ம பல்லவனாகவும் கற்பனை செய்து, எனது தம்பியுடன் காகிதக்கத்தியில் சண்டைப்போட்ட காலத்திலிருந்து அடுத்தடுத்து நகர்ந்து எனது கற்றலை பல தளங்களுக்கு விரிவு செய்து வருகிறேன். தத்துவம், தலைவர்களின் வாழ்க்கை, இணைய இலக்கியம் போன்றவை எனது விருப்பத்துறைகள்.  

தானம் அறக்கட்டளையுடனான எனது 7 ஆண்டுகால உறவு, எனது பார்வையில், எனது வாழ்க்கைமுறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தித்தானிருக்கிறது. நிறைய நண்பர்கள், அக்கறையுள்ள உயர்பணியாளர்கள், நிறுவனத்தின் தனித்துவம், தொழில்முறை பணிச்சூழல் என பல வகைகளில் எனக்குள் தானம் குழுமம் கரைந்துள்ளது. இங்குள்ள சுயக்கட்டுப்பாடுடன் இணைந்த சுதந்திரம், ஒவ்வொறு வினாடியும் கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு எனது பணிப்பொறுப்பில் மாற்றம் நிகழ்ந்தது. எனது தனிப்பட்ட காரணங்களுக்காக என்னுடைய சொந்த ஊருக்கு (திருத்தணி) நான் கேட்டிருந்த பணி மாற்றலை ஏற்றுக்கொண்டு அதற்கு வழிகோலிய எனது திட்டத்தலைவர் மற்றும் நமது செயல் இயக்குநருக்கு நன்றி. இங்கு வந்த பின் குடும்ப அளவிலான சில சிக்கல் தீர்ந்து அமைதி ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்கு எனது பணியின் தன்மை இருமடங்காகியுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று மாதங்கள் மிகக் கடினமாகவும், பயணங்கள் நிறைந்ததாகவும் இருந்து வந்துள்ளது. எனது பணியினை சீரமைத்துக் கொண்டு முறைப்படி திட்டமிட வேண்டினாலும், இயல்பாக அடுத்தடுத்து வரும் பணிகள் எதையும் யோசிக்கவிடாமல் என்னை இழுத்துச்செல்கிறது. எனது தாய்த்திட்டமான பஞ்சாயத்து திட்டத்துக்கு கடந்த 5 மாதங்களாக பெரிய பங்களிப்புச் செய்யவில்லை என்றாலும் எனது நிலையைப் புரிந்துகொண்டு பஞ்சாயத்து திட்டப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளும் திரு.சிங்கராயர் மற்றும் பஞ்சாயத்து அணியினரின் அன்புக்கு நன்றி. எட்டுக்கால் பூச்சிப்போல பல திட்டப்பொறுப்புகளில் தலையைக்கொடுத்து எல்லாத் திசையிலும் பயணித்து எந்த திசையிலும் முன்னேறாமல் இருப்பது போல் இருக்கிறது. இதனை உடனடியாக சீர் செய்து கொள்ள வேண்டும். தற்போதய நிலையில் எனது மண்டலத்தை நேர்படுத்தி, முன்னோடித் திட்ட அலகுகளை ஏற்படுத்துவதும், பஞ்சாயத்து திட்டத்தை விரிவாக்க நிலைக்கு முன்னெடுத்துச் செல்வதில் என்னை ஈடுபடுத்திக்கொள்வதும் மட்டுமே முக்கியமானதாகப் படுகிறது. வரும் ஆண்டில், இதைச் சார்ந்து எனது பணியினை திட்டமிட்டு கொள்ள எண்ணியுள்ளேன்.
*****************

2008: தீராநதி



ஒரு கோடைகாலத்தின் மாலைவேளையில் நானும் ராஜ்குமாரும் பெரியார் பஸ்நிலையம் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது சட்டென மழை பிடித்துக்கொண்டது. நல்ல மழை; நாங்கள் ஹோட்டலின் வெளிக்கூரையின் கீழ் நின்றுகொண்டிருந்தோம். அந்த வெளிக்கூரையில் நெருக்கி 20 பேர் நிற்கலாம். நாங்கள் வந்தபோது சுமார் 15 பேர் நின்றுகொண்டிருந்தனர். மழை வலுக்கவே,  மேலும் சில பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். அப்போது மழைக்கு ஒதுங்க ஒரு கன்றுக்குட்டி கூரைக்குள் நுழையப்பார்த்தது. உடனே எல்லாரும் அந்த கன்றுக்குட்டியை கூரைக்கு வெளியே துரத்தினார்கள். கன்றுக்குட்டி மீண்டும் மீண்டும் உள்ளே வர முயற்சித்தது. நமது மக்களும் அதை விடாமல் துரத்தினார்கள். கொஞ்ச நேரம் மழையில் பொறுத்துப் பார்த்த கன்றுக்குட்டி, பிறகு நனைந்தபடி சென்று விட்டது.

அப்போது சாதாரணமாகத் தெரிந்த இந்த நிகழ்வினை பிறகு யோசித்துப் பார்க்கும் போது, உண்மையில் எனது கருணையின் அளவு என்ன? ஏன் என்னால் ஒரு பார்வையாளனுக்கு மேல் இந்த நிகழ்வில் பங்கெடுக்க முடியவில்லை? மழையில் நனையக்கூடாது என்ற எனது விருப்பத்துக்கும் அந்த கன்றுக்குட்டியின் விருப்பத்துக்கும் என்ன வேறுபாடு? எந்த வகையில் நாம் உயர்ந்தவர்கள்? மனதுக்குள் அடுக்கடுக்காக பல கேள்விகள் ஊர்ந்தன. ஓய்வாக இருக்கும் போது டி.வியில் வரும் வங்கி விளம்பரத்தில் ஒரு யானைக்குட்டி கால்பந்து விளையாடுவதையும், செல்போன் விளம்பரத்தின் நாய்க்குட்டியையும் ரசிக்கும் மனம், யதார்த்தத்தில் எனது சுகநிலைக்கு முன்னுரிமை அளித்தது பற்றி தொடர்பு படுத்தியபோது எனது தன்னூக்கம் கொஞ்சம் மட்டுப்படத்தான் செய்தது.

இது போல, பேருந்தில் பிடித்த இடத்தை சகபயணிக்கு விட்டுத்தர மனம் மறுப்பது, அலுவலகச் சலிப்பை மனைவியிடம் வெளிப்படுத்துவது, எனது முன்னெண்ணத்தின் அடிப்படையில் அணி உறுப்பினர்களின் குணங்களைத் தீர்மானிப்பது, என் மீதான தவறுகளுக்கு எனக்கு நானே விளக்கமளித்துக்கொள்வது என பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னைப் பற்றி நானே அணிந்துகொண்ட முகமூடிகள் கரைந்து, எனது நடுநிலைப் பற்றி எனக்கு சந்தேகம் ஏற்பட்டதுண்டு. வண்டி நன்றாக ஓட எஞ்சின் மட்டுமல்ல; அவ்வப்போது பிரேக்கும் முக்கியமெனப்படுகிறது. அந்த வகையில், எனது நம்பிக்கைகள், எனது செயல்பாடுகள், நிறுவனத்துக்கும் எனக்குமான உறவு அதன் பயன்கள் என பல கோணங்களில் ஆய்வு செய்து கொள்ள இது போன்ற ஆற்றுப்படுதல் நிகழ்வுகள் உதவுகின்றன. என்னை நானே ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஓரளவுக்கு என்னை சரிசெய்து கொள்ள முடிகிறது. எஸ்.ரா சொல்வது போல், “எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப்போல, உலகை எனது இருப்பிடத்துக்கு கொண்டு வரும் முயற்சியாகவே” ஆற்றுப்படுதல் நிகழ்வினைக் கருதுகிறேன்.

ஒருமுறை வடக்கே களப்பார்வைக்காக சென்று கொண்டிருந்தபோது, கூட வந்திருந்த நேபாள நண்பருடன் நேபாளத்தின் சமீப அரசியல் மாற்றம், நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேற்றுமைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேச்சினூடாக அவர், “நேபாளம், இந்தியாவைவிட பெரியது” என்றார். எப்படி என்றபோது, “இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அதிகபட்சம் எவ்வளவு நேரத்தில் சென்றடைவீர்கள்?" என்று கேட்டார். நான், தமிழ்நாட்டிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கோ இமய மலைப்பகுதிக்கோ செல்லும் தூரத்தை மனதில் கொண்டு, “அதிகபட்சம் 4 நாட்கள்” என்றேன். நேபாளத்தில், தனது திட்டம் செயல்படும் கிராமத்தை சென்றடைய அவருக்கு 7 நாட்கள் ஆனதாகக் குறிப்பிட்டு, மலைகளினூடான, சாலைகளற்ற பாதை; நிச்சயமற்ற பயணத்தின் தன்மையை விளக்கியபோதுதான் எனக்கு உண்மை புரியத் தொடங்கியது. பொதுவாக இங்கு 4 மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு அங்கு ஒரு நாள் ஆகக்கூடிய துன்பத்தினை விவரித்தார். மனித மனம் தூரத்தை கணக்கில் கொண்டு பெரிய தேசம், சிறிய தேசம் என பிரிக்கிறது. தூரத்தைவிட, அதனை அடைய ஆகும் காலம்; அதற்கான போக்குவரத்து வசதிகளை நாம் கவனிக்கத் தவறுவதை உணர்ந்தேன். அந்த வகையில் பார்க்கப்போனால், அமெரிக்கா நம்மை விட சிறிய தேசம். நேபாளம் நம்மைவிட பெரிய தேசம். தொலைவினை அளவிட தூரத்தை விட, காலம் சரியான அளவுகோலாக இருக்க முடியும் எனத்தோன்றியது. இதுபோல், இயந்திரத்தனமான கல்வி முறை எனக்குள் திணித்த நம்பிக்கைகள், கற்பிதங்கள் ஆகியவை அனுபவங்கள் மூலம், மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய பார்வைகள் உதிக்கும் தருணங்கள் எனக்கு போதிமரமாய் இருந்துள்ளன.

திட்டமிடல் நிகழ்வுக்காக ஒருமுறை கழுகுமலைக்குச் சென்றிருந்தேன். மலையேறி, மேலிருந்து முதன்முதலாக வெட்டுவான் கோவிலைப் பார்த்ததும், மனம் கொஞ்ச நேரம் திகைத்து நின்றது. அதிகம் அறியப்படாமல் எங்கோ கண்காணாத இடத்திலிருக்கும், அந்த அற்புதத்தைப் பார்த்தபோது, நெஞ்சுக்குள் மாமழை பெய்வது போலிருந்தது. மதுரைக்குத் திரும்பிய பின்பும், மூன்று நாட்களுக்கு மனம், ஆளில்லாக் காட்டில் காயும் முழுநிலாவைப்போல கம்பீரமான மௌனத்துடன் நின்றிருந்த அந்தக் கோவிலையே சுற்றிக்கொண்டிருந்தது. கோவிலை வடிவமைத்த யாரோ பெயர் தெரியாத சிற்பியின் கனவும், அது நிறைவேறாமல் பாதியிலேயே நின்றுபோன சோகமும் எனக்குள் வியாபித்தது. வெற்றி பெறாத பல உன்னத முயற்சிகள் அவை வெற்றிபெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக உலகின் கவனத்திலிருந்து நிராகரிக்கப்படும் தருணங்கள் வலிநிறைந்தவை. மனிதன் அங்கீகாரத்துக்கு ஏங்கும் மிருகம். சமூகத்தின் நிராகரிப்புக்கு ஆளாகும் மனிதனின் நல்ல பண்புகள் வெளிப்படாமலேயே கரைந்துவிடுகின்றன. நமது பணிகளில் நாம் எப்போதும் தனியாளாக எதையும் சாதிப்பதில்லை. எல்லாம் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு தான். வெற்றி பெற்ற செயல்களில் இயல்பாகவே அங்கீகாரம் தாமாக வந்துவிடுகிறது. தோல்விபெற்ற பல பணிகளிலும் தீவிரமாய் உழைத்தவர்களின் வியர்வை கரைந்திருப்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். உண்மையில், தோல்வி பெறும் போது அல்லது சிக்கலில் இருக்கும் போது தான் நமக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. வெட்டுவான் கோவில் எனக்குள் செதுக்கிய இந்த செய்தி எனக்குள் மூடியிருந்த பல ஜன்னல்களை திறந்து வைத்தது.

“வாடிக்கையாளர்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளவும், தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல” என்ற வாசகத்தை பெரும்பாலான உணவகங்களில் காணும் போது, நாம் எவ்வளவு பாதுகாப்பற்ற சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என உணரமுடிகிறது. அதைவிட, இதை சகித்துக்கொண்டிருக்கும் சக மனிதர்களையும், சேவைதரும் நிறுவனங்கள் தமது கடமையை இது போன்ற போர்டு வைப்பதுடன் நிறுத்திக்கொள்ளும் கையாலாகாதத்தனத்தையும் காணும் போது கோபம் வருகிறது. காண்பவர்களையெல்லாம் குற்றவாளிகளாகச் சந்தேகிக்க வாய்ப்பேற்படுத்திய இதே சமூகத்தில்தான், நாம் மாற்றுப் பண்புகளுடன் அமைந்த; நீதிசார்ந்த சமூகத்தைக் கட்டமைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்பதைவிட இம்முயற்சியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதே மிகப்பெரிய சாதனை என எண்ணத்தோன்றுகிறது.

சில சமயங்களில் நல்ல ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காது. ரிட்றிட் என்ற  வார்த்தைக்குப் பொறுத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காமல் கடைசியில் ஆற்றுபடுதல் என்ற வார்த்தையை அறிந்தேன். அதேபோல் மென்டரிங் எனும் வார்த்தையை தமிழ்ப்படுத்த முடியாமல் வழிகாட்டுநர், குரு-சீடர் முறை போன்ற தோராயமாய் அதே பொருளைத்தரும் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டியுள்ளது. மிகப்பொருத்தமான மாற்று வார்த்தை கிடைக்காதவரை அதே ஆங்கில வார்த்தைகளை தமிழுக்கு தத்தெடுத்துக்கொள்வது தவறில்லை. மென்டரிங் மிகச்சிறந்த வார்த்தை மட்டுமல்ல, அது ஒரு தத்துவம்; தொடர்செயல். சமீபகாலமாக, நமது நிறுவனத்தில் மென்டரிங் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. நமது செயல்முறைகளிலும் அது பிரதிபளிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தாய், தனது குழந்தைக்கு சாப்பிட, நடக்க, பேச, எழுத சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை இயல்பாய் எதிர்கொள்ளத் தேவையான திறனை விதைக்கும் செயல்முறையை, நமது பணிச்சூழலில் மூத்தப்பணியாளர் இளம் பணியாளருக்கு ஏற்படுத்தித் தருவதே மென்டரிங் எனலாம். ஒரு குருவின் கடமை சீடருக்கு சொல்லித்தருவது இல்லை, சீடர் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்ற தத்துவம் மென்டரிங்குக்கும் மிகப்பொருத்தம். அன்பே சிவம் படத்தில் கமல், மாதவன் மீது தனது கருத்தை திணிக்காமல், அவர் போக்கில் தன்வயப்படுத்தி, சகமனிதர்கள் மீதான பெருங்கருணையை மாதவனிடம் உண்டாக்குவது மென்டரிங் பற்றிய நல்ல பதிவு. “நான் ஒரு எறும்பைக் கொன்றேன், எனது மூன்று குழந்தைகள் அதை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற ஜென் கவிதையை படித்தபோது, எனக்குள் சிலிர்த்தது. சூழலின் எல்லாப் பக்கத்திலும் நம்மால் காணமுடியாத கண்கள் இருக்கின்றன. அறியாமல் நான் செய்யும் வன்முறையை, தவறை சுற்றிலும் பல கண்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றன. நான் என்னை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாமல் மென்டரிங் முறையில் நேர்மையாக பங்கெடுக்கமுடியாது என்றே தோன்றியது.

எனது மென்டாராக இருக்கும் திரு.சிங்கராயர் அவர்கள், என்னை கடந்த ஆறு ஆண்டுகளாக வார்த்தெடுக்கும் முறை மிக இயல்பாக சுவாசத்தைப் போல தன்னிச்சையுடன் நடந்து வருகிறது. அவர் என்னை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி செய்யவேண்டும் என்று விளக்குபவர் இல்லை; என்னை சுதந்திரமாகச் செயல்படவைத்து அதிலிருந்து என்னையும் எனது செயலையும் மேம்படுத்துவார். இந்த அணுகுமுறை எனக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளது. அவரது ஆளுமை, பணி செய்யும் முறை, முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை நான் பார்த்து, உணர்ந்து சந்தேகம் ஏற்படும் போது அவரிடம் கேட்டுத் தெளிந்து கொண்டிருக்கிறேன். மற்ற எல்லாவற்றையும் விட மென்டார்-மென்டீ இருவருக்கிடையிலான பரஸ்பரநம்பிக்கையே தொப்புள்கொடியாய் மென்டரிங்கை வளர்ப்பதாகப்படுகிறது. அந்த வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். நிறுவனத்தின் பணிப்பொறுப்பின் படி, பஞ்சாயத்துத்திட்டத்தின் திட்டஇணையாளர்கள் செந்தில், விஸ்வா, கணேசன் ஆகியோருக்கு நான் மென்டாராக இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் மூவரும் நல்ல ஆர்வம் மிக்கவர்கள், எங்கள் பணி நிலைகளைத் தாண்டி எங்களுக்குள் உள்ள நல்ல உறவுமுறையால் தகவல் தொடர்பு நன்றாகவே இருந்துவருகிறது.

இதையெல்லாம் தாண்டி, நாம் புழங்கும் சமூகம், நமக்கு மிகமுக்கிய மென்டராக இருந்து வருகிறது. ஒருமுறை வறட்சியின் பிரச்னைகள் குறித்து சிவகங்கை பகுதியில் ஒரு விவசாயியிடம் பேசிக்கொண்டிருந்த போது, "மழை பெஞ்சா நெல்லை விப்போம்; பெய்யலனா நெலத்த விப்போம்" என்று பேச்சுவாக்கில் அவர் கூறியது கேட்டு அசந்துபோனேன். வறட்சி; அதன் விளைவு; அதனை அவர்களின் வாழ்க்கை முறையோடு இயல்பாய் பொருத்திக் கொண்ட பக்குவம் இதையெல்லாம் யோசித்தபோது, அவர்களுக்குச் சொல்ல எந்த செய்தியுமில்லாமல் நான் நின்றிருந்தேன். சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தில், “தெருக்களில் இறங்கித் தேடும்போது, எல்லாம் கிடைக்கும். நமது கேள்விகள் அனைத்துக்கும் தெருக்களில் பதிலுள்ளது” என்ற வசனம் வரும். அது சத்தியமான உண்மை. கிராமத்துக்கு சென்று திரும்பும் ஒவ்வொறு முறையும் கிராமம் எனக்கு ஏதாவதொரு செய்தியை சொல்லித்தந்து அனுப்பும் மென்டாரிங் முறை எப்போதும் உற்சாகமான அனுபவம்.

பஞ்சாயத்து அமைப்புகளில் மாற்றம் கொண்டுவர ஒரேசமயத்தில் அடித்தளத்திலும் அரசின் கொள்கைகளிலும் ஓங்கியடிக்க வேண்டியுள்ளது. நிச்சயம் இது சவாலான பணி. சிலந்தி, வலையைப் பின்னுவது போல நேர்த்தியுடனும்; சலைக்காமலும் நமது பணியை விடாமல் தொடரவேண்டியுள்ளது. ஒருமுறை ஒரு பஞ்சாயத்தளவில், மக்கள் பணியாளர் செய்யவேண்டிய பணிகளை பட்டியலிட்டபோது சராசரியாக அவர் மாதம் 65க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளதாகத் தெரியவந்தது. ஒன்றிய அளவிலுள்ள வளர்ச்சிப்பணியாளர், மாதந்தோறும் 400 விதமான பணிகளை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. இதனை சிறப்புடன் செய்ய உள்ளார்ந்த வேகம் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். கடந்த ஒரு வருடமாகவே எனது சில அணி உறுப்பினர்கள் மீதான எனது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பஞ்சாயத்து திட்டத்திலுள்ள சில அணி உறுப்பினர்களின் பணித்தீவிரம் எனக்கு எந்த உற்சாகத்தையும் அளிக்கவில்லை. மாதந்தோறும் புத்தாக்கமற்ற வரட்டுப்பணிகள், எதேச்சையாக நிகழும் களச்செயல்பாடுகள், பெயருக்குத் தயாரிக்கப்படும் தகவல் அறிக்கைகள் என ஏதோ நிர்பந்தத்தில் பணியாற்றுவது போல் செயல்படுவதால் எனது களஈடுபாடும் குறைந்துவிட்டது. பெரும்பாலான மாதக் கூட்டங்களில், மதிய பொழுதின் மின்சாரமற்ற இருட்டறையில் அமர்ந்திருக்கும் புழுக்கத்தை உணர்ந்திருக்கிறேன். எனது திட்டத்தலைவர் திரு.சிங்கராயர், எனக்கு அளித்திருக்கும் கற்றல் வாய்ப்புகளும்  ஆட்சியியல் துறையிலுள்ள எனது ஆர்வமும்  இத்திட்டத்தில் இன்னும் என்னை இணைத்துக்கொண்டுவருகிறது என நினைக்கிறேன். இதன் காரணமாகவே,
போன வருடத்தில் பஞ்சாயத்து திட்டத்துக்கான எனது களப்பங்களிப்பு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. திட்டப்பணிகளை திரு. சிங்கராயர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படுத்துவதும் சில திட்ட அளவிலான ஆய்வுகள், பயிற்சிகள், அறிக்கைகள், வெளியீடுகள் மற்றும் தகவல் தொடர்புகளை ஒருங்கிணைப்பதையும் செய்துள்ளேன். மற்றபடி மைய அலுவலகத்திலிருப்பதால் அவ்வப்போது பொதுவான நிறுவனப்பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வாய்ப்பேற்பட்டது கூடுதல் சந்தோஷம்.

பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சியின் போது கிராம பஞ்சாயத்தின் அமைப்பை பங்கேற்பாளர்களுக்கு விளக்க ஒரு சைக்கிள் படத்தை வரைந்து, அதன் பாகங்களை பஞ்சாயத்து அமைப்பின் அங்கங்களுடன் பொறுத்திப் புரியவைப்போம். சைக்கிள் படத்தை முதன்முதலில் போர்டில் வரையும் போது எனக்கு சைக்கிள் படம், அவ்வளவு சுத்தமாக வரவில்லை. பங்கேற்பாளர்கள் எனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதோ ஒன்றிரண்டு கதைகள் சொல்லி அந்த வகுப்பை ஒப்பேத்தினேன். எளிமையான சைக்கிள் படம் தானே, சுலபமாக வரைய முடியும் என்ற எனது குருட்டு நம்பிக்கை அதை வரைய முயற்சிக்கும் போது அவ்வளவு சுலபமில்லை என தெரியவந்தது. இது போல பல வேலைகளை வெளியிலிருந்து பார்க்கும் போது சுலபமாகத் தெரிந்தாலும் அதில் ஈடுபடும் போதுதான் அதன் வீரியம் தெரியவருகிறது. இதை நாட்டார் வழக்கில் “கிணறு வெட்ட பூதம் வந்தது” என கூறுவார்கள். பார்க்கும் போது சாதாரண கட்டமைப்பாக தெரியும் கிணறை வெட்டுவது சுலபமில்லை. எல்லா செயல்களும் அதற்கேயுரிய சிக்கல்களை கொண்டுள்ளது என்பதை பல சந்தர்பங்களில் புரிந்து கொள்ளமுடிகிறது. அதே போலத்தான் டாடா தானம் அகடமியில் ஆசிரியராக பணியாற்றுவது. வெளியிலிருந்து பார்க்கும் போது, பாடம் எடுப்பது மிகச்சுலபமான காரியமாக தென்பட்டாலும் உள்ளே இறங்கும் போதுதான் அதன் தீவிரம் எனக்கு விளங்கியது. டாடா தானம் அகடமியில் இரண்டாவது ஆண்டாக சில குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியராக பணியாற்றுகிறேன். முழுநேர ஆசிரியராக என்னை மாற்றிக்கொள்ள கல்விநிறுவனத்துக்குரிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. மிகஆழமான துறையறிவும், புதிய கருத்தாக்கங்கள் ஏற்படுத்துவது, ஆய்வுகள் மேற்கொள்வது, துறை அமைப்பினருடன் இணைப்பினை ஏற்படுத்துவது, மொழியாளுகை, மாணவருக்கு பாடம் சொல்லித் தருவதுடன் அவர்களுக்கு முன்மாதிரியாய்; வழிகாட்டியாய் இருப்பது என பல்வேறு நிலைகளில் உயர்தரத் திறனும் பக்குவமும் தேவைப்படுகிறது. அவற்றை எனக்குள் ஏற்படுத்திக்கொள்வதில் தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும்.

திரு.வள்ளிநாயகம், திரு.மாதவன்குட்டி, பேரா.சண்முகம், பேரா.வெங்கட்ராமன், திரு.வேங்கையன், சமீபத்தில் மறைந்த பேரா.ரஞ்சித்குப்தா போன்ற தானம் அறக்கட்டளையுடன் தொடர்புடைய மூத்த செயல்இளைஞர்களுடன் பல்வேறு சந்தர்பங்களில் அவர்களின் பணிகளை கவனித்தோ உடன் பணியாற்றியோ என்னை பலப்படுத்திக் கொண்டதுண்டு. முதிய வயதிலும் அவர்களுக்கிருக்கும் கற்றலார்வம், மற்றவர்களுக்கு வழிகாட்டும் பெருந்தன்மை, இளைஞர்களுக்கிணையான செயல்திறம் ஆகியவற்றைக் காணும் போது என்னுடைய அக மற்றும் புறத் திறன்கள், நான் சார்ந்திருக்கும் துறை மீதான எனது ஆளுமையை புதுப்பித்துக் கொள்ளவேண்டிய தேவையை உணர்கிறேன்.

இந்த வருடம் என்னுடைய ஆய்வியல் அறிவு முறைபடுத்தப்பட்டது. இதற்கு முன் சின்னச் சின்ன ஆய்வுகளை பணித்தேவைக்காக செய்து வந்த நான் அகடமியின் ஒரு முக்கிய ஆய்வுப்பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் ஆய்வியல் பற்றிய எனது புரிதல் பலமாகியுள்ளது. குறிப்பாக இத்திட்டத்தின் ஆரம்பக் காலங்களில் கார்த்திகேயனுடன் பணியாற்றியபோது நான் கற்றுக்கொண்டது அதிகம். அதே போல், ஜெனாவிடமிருந்து ஆய்வு சார்ந்த உள்ளடக்கத்தை கற்றுக்கொள்ள வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. எண்களின் மீது அவருக்கிருக்கும் காதல் ஆச்சரியமானது. வரும் காலங்களில், அவரும் நானும் இணைந்து சில ஆய்வுக்கட்டுரைகள் எழுத திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 வருடத்துக்குள் முனைவர் பட்டம் பெற முயற்சிக்க வேண்டும். இப்போதெல்லாம் நான் எழுத நினைத்த உடனே கிடைக்கும் காகிதத்தைப் போல, வீடியோ சாதனங்கள் எளிமையாகிவிட்டது. கையில் ஒரு கேமரா மொபைல்போன் இருந்தால் எல்லாருமே ஒளிப்பதிவாளராகி விடுகிறோம். காட்சித் தொடர்பியல் துறையில் சிறு வயதிலிருந்தே இருந்த ஆர்வம் இப்போது மீண்டும் துளிர்விட்டுள்ளது. வளர்ச்சி மற்றும் மரபு பற்றிய ஆவணப்படங்களை எனது பணி எல்லைக்கு வெளியே செய்ய ஆரம்பிக்க வேண்டும். இப்போது பெரியாரையும் திருவாசகத்தையும் ஆழமாக படிக்க ஆரம்பத்திருக்கிறேன். எதையாவது கற்றுக்கொள்ள உலகம் திறந்துதானிருக்கிறது. அனுபவம் அதிகரிக்க அதிகரிக்கத் தான் எனது அறியாமை எனக்குப் புரியவருகிறது.

இலவசமாய் கிடைக்கிறதே என்று இணையதளத்தில் எனக்கென மூன்று வலைப்பூக்களை தன்னுணர்தல், ஆட்சியியல், ஜென்மரபு ஆகிய தலைப்புகளில் ஏற்படுத்தி வைத்ததோடு சரி. அதை முறையாக பராமரிக்கமுடியவில்லை. இப்போது தான் இணையதளத்துக்கான யுனிகோட் தமிழ் தட்டச்சு புரிய வந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக வலைப்பூவை பராமரிப்பது பற்றி அகடமியிலுள்ள ஆனந்தா உதவுவதாக கூறியிருக்கிறார். அவர் வழிநடத்தும் அகடமி மாணவர்களுக்கான வலைப்பூ மிக அழகாக மெருகேறி வருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரிடம் கற்றுக்கொண்டு மேற்கொண்டு பணிகளை வரும் ஆண்டில் தொடரவேண்டும்.

நாம் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்யப் பழகிய அளவுக்கு, ஒரு நேரத்தில் ஒரேயொரு செயலில் கவனம் செலுத்தப் பழகவில்லை என்று தோன்றுகிறது. உண்மையில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு பணியில் ஈடுபடுவதற்குத்தான் அதிக பொறுமையும் திறனும் தேவைப்படுகிறது. எனக்குள் இந்தப் பிழை ஆழமாக ஊன்றியிருப்பதாகப்படுகிறது. புத்தர், “வாழ்க்கையை, நிகழ்காலத்தில் வாழ்வதே சாதனை” என்கிறார். பெரும்பாலும் எனது நிகழ்காலம், நடந்து முடிந்த பணிகளின் சோகத்தையும் நடக்கப்போகின்ற பணிகள் பற்றிய கனவுகளையும் சுமந்து கொண்டிருக்கிறது. காலை அறவழிபாட்டு பிரார்த்தனையின் 5 நிமிட தியானத்தில் 50 விதமான நினைவுகள் வந்து செல்கின்றன. பல சமயங்களில் பல வித பணிகளில் ஈடுபடுவதால் எந்த ஒரு பணியிலும் முழுநிறைவைப் பெறமுடிவதில்லை. அதே சமயத்தில் பல பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளும் போது ஏற்படும் வாய்ப்புச் சுதந்திரம் உற்சாகத்தைத் தருகிறது. இந்த முரண், பல சமயங்களில் ஆச்சரியத்தையும் சோர்வையும் எனக்குள் உண்டாடக்கியதை, சரிசமமாக ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டியுள்ளது.

நாம் புத்தாக்கத்தின் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மால் நினைக்கமுடிவதைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. கிளவுட் கம்ப்யூட்டிங், ஜி3, நானோடெக், ரோபாட்டிக்ஸ், வெர்ச்சுவல் ரியாலிட்டி என்று தொழில்நுட்பச் சொற்கள் நம்மிடையே ஜல்லியடிக்கின்றன. கூக்ளி நினைத்தால் என் வீட்டுக்குள் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று வினாடிக்கு வினாடி கண்காணிக்க இயலும். இந்த சூழ்நிலையில் நமது வளர்ச்சிப் பணிகளின் தன்மையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. சந்தை மட்டுமே நமது இருப்பைத் தீர்மானிக்கும் என்றான பின், நமது மனிதவளம்; நமது சேவைகள்; நமது அணுகுதுறை என அனைத்தும் மிக உயரிய நிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. சக பணியாளர்கள், மாறி வரும் சமூகச் சூழலின் அழுத்தத்தை எந்தளவுக்குப் புரிந்துள்ளனர் என்பது பற்றி இருப்புக்கணக்கு எடுக்கவேண்டியுள்ளது. அதனடிப்படையில் நமது மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள், வழிகாட்டுநர் முறைகள் வலிமைப்படுத்தப்படவேண்டும் என எண்ணுகிறேன்.

இப்போதெல்லாம் அரசியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரித்து வருகிறது. நமது நிறுவனமும் அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியல் என்றவுடன் ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த அரசியலல்ல; எல்லாவித கட்சிகளும் பொதுவாய் நாம் நமது தனித்தன்மையுடன் அரசியலமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எல்லா காலத்திலும் மக்களாட்சி நியாயமானதாக; நன்மை தருவதாக இருக்காது. பேய்களின் தேசத்தில், பிணம் தின்னுவது தானே சாத்திரமாகும்? உணர்வற்ற மக்கள் கூட்டத்தில் பெரும்பான்மை மக்களின் முடிவுகள் வளர்ச்சிக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது. மேற்கு வங்காளத்தின் சிங்கூர் பிரச்சனை இதற்கு நல்ல உதாரணம். இந்த சூழ்நிலையில் நமது மக்கள் அமைப்பின் உறுப்பினர்களை, நம்பிக்கைத் தரும் தலைவர்களாக சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதும் மக்களை குணப்படுத்துவதும் நமது கடமையென்றே தோன்றுகிறது. இப்போதிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வளர்ச்சிப் பணி பற்றிய அடிப்படை அறிவினைப் புகட்ட சிறப்பு கல்வித்திட்டங்களை நாம் வகுத்து அவ்வுறுப்பினர்களிடையே குறைந்தபட்ச நேர்மையை புகட்டவேண்டும். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் நாம் நமது பண்புகளை விதைப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பிருப்பதை அனைத்துத் திட்டங்களும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் எனத் தோன்றுகிறது.

திறனுடன் செயல்படாதவர்கள் மீதான நிறுவனத்தின் பெருந்தன்மை அல்லது சகிப்புத்தன்மை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுண்டு. இதனால் தீவிரத்துடன் பணி செய்பவர் அதிக பணிச்சுமைக்கு ஆளாவதும் நாளடைவில் நல்ல பணியாளர்களும் தமது பணிப்பொறுப்புகளைக் குறைத்துக்கொள்வதும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். எனக்கும் கூட இந்த அனுபவம் ஏற்பட்டதுண்டு. இப்போதிருக்கும் பணியாளர் பணியாய்வு முறைகள் பொதுப்படையாக இருப்பதாக படுகிறது. இதனைத் தீர்க்க சரியான, அறிவியல் பூர்வமான பணியாளர் மதிப்பீட்டு முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆறு வருடங்களுக்கு முன் அகடமியில் படித்துக்கொண்டிருந்த போது கோடை வட்டார களஞ்சியத்தின் மகாசபா கூட்டத்துக்கு பார்வையாளராக நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம். விழா நிகழ்வில் வேங்கையன் ஐயா அவர்களின் குரலில், “தனித்து நட” பாடலைக் முதன்முதலாய் கேட்டபோது உடம்பெல்லாம் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தேன். நமது முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்படாத போது; தோல்விகளை சந்திக்கும் போது நாம் தனித்தே நடக்க வேண்டியுள்ளது. ஆனால் நிறுவன அமைப்பில் இப்பாடல் தனிமனித குணத்தை முன்னிருத்தி, அணிச் செயல்பாட்டுக்கும் சேர்ந்து பணியாற்றும் குணத்திற்கும் எதிர்கருத்தைக் கொண்டிருப்பதால், தனித்துவத்தை இழக்காமல் குழுவாய் சாதிப்பது குறித்த பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனப்படுகிறது. எப்படியிருந்தாலும் இப்போதும் கூட தாகூரின் அந்தப்பாடல் எனக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் ஆறுதலாக இருந்து வருகிறது.

“முப்பது வயதுக்குள் நீ கம்யூனிசத்தை விரும்பவில்லையென்றால் உனக்கு இதயமில்லை; முப்பது வயதுக்கு மேல் நீ கம்யூனிசத்தை விரும்பிக்கொண்டிருந்தால் உனக்கு மூளையில்லை” என்ற வேடிக்கையான வாசகம், போனமாதம் எனது 30வது வயதை நிறைவு செய்த போது நினைவுக்கு வந்தது. உண்மை தான். இப்போது எனது கொள்கைகள், வாழ்க்கைமுறை, நம்பிக்கைகள் ஆகியவற்றில் 360 டிகிரி மாற்றத்தை மனம் விரும்புகிறது. எனது தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவைப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக எனது பொருளாதாரத் தேவை என் கைக்கு மீறி சென்றுள்ளது. எனது பெற்றோர் என் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பணியில் விருப்பமில்லை. நான் அவர்கள் பேச்சை கேட்காததால் அவர்கள் என்னுடனான பேச்சைக் குறைத்துவிட்டார்கள். இப்படியே எவ்வளவு நாளைக்கு எனது பிரச்சனைகளைத் தள்ளிப்போட முடியுமென்று தெரியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட எனது பெற்றோர்களில் காலத்திலேயே அவர்கள் விரும்பும் படி என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் எனத்தோன்றுகிறது.

எவ்வளவு பேர் எடுத்துக் கொஞ்சினாலும்; எவ்வளவு பேர் அரவணைத்தாலும்; கடைசியில் தாயைத் தேடும் குழந்தையைப் போல், மனம் அமைதிக்கு ஏங்குகிறது. மிகப்பெரிய புயலின் மையக்கண் கூட சலனமற்று அமைதியாகத் தானிருக்கும் என்று அறிவியல் ஞானம் சொன்னாலும், வாழ்க்கையின் சிறிய காற்றசைவுக்குக்கூட அறிவு நிதானமின்றித் திரிகிறது. காலத்தின் நித்தியத்தைப் போல தீராமல், ஒவ்வொரு கணமும் அனுபவங்கள் நம்மைக் கடந்துக்கொண்டு தானிருக்கிறது. தீராநதியாய் வழிந்து செல்லும் அனுபவத்தின் வாயிலாக தாகத்தைத் தீர்த்துக்கொள்வது தான் வாழ்க்கை என நாம் பெயரிட்டுக் கொள்கிறோம். காலம் நமது எல்லா காயங்களுக்கும் மருந்தாக இருக்கிறது. நமது மகிழ்ச்சி, துக்கம், விரக்தி, கோபம், வெறுமை என எல்லா உணர்வுகளும் தீராநதியின் தொடர்ச்சியான நீரோட்டத்தில் கரைந்து காணாமல் போகின்றன. அனுபவங்களை நமது மதிப்பீடுகளை வைத்து நியாயப்படுத்துவதற்கு பதிலாக நதியின் போக்கில் செல்லும் சருகைப்போல எல்லாவற்றையும் பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளும் மனம் வாய்ப்பது ஒரு அற்புத வரம்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, எதிரே டி.வியில் இசையருவி ஓடிக்கொண்டிருந்தது. வீட்டுக்கு வெளியே, பின்னிரவில் பூக்கத்துவங்கும் பவழமல்லிகள் மலரத்தொடங்கியிருந்தது. மொட்டு பூவாக மாறும் போது வெளிப்படும் முதல் வாசம் அலாதியானது. படித்து முடித்து, முதன் முதலில் வத்தலகுண்டில் நான் பணியமர்த்தப்பட்ட போது எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன், நினைத்ததை செய்து பார்த்து, பெருவேகத்துடன் செயல்பட்ட எனது ஆரம்பக் காலத்தை அது நினைவுபடுத்தியது. காலம் செல்லச் செல்ல, நமது பழைய அனுபவம் தந்த நம்பிக்கை, புதிய படிப்பினைகளை பெறத் தடையாகவும் மாறியுள்ளது. எப்போதும் வெற்றுப்புல்லாங்குழலாய் இருக்க ஆசையிருந்தாலும் யதார்த்தத்தில் கடினமாகத் தானிருக்கிறது.

காலைத் தூக்கத்தின் போது, எழுந்திருக்க மனமில்லாமல் இன்னும் கொஞ்சநேரம் தூங்கலாமே என்ற ஆசை வரும். கனவுகள் நம்மை வசீகரித்து தூக்கத்தை இழுத்துச் செல்லும். அதுபோல எழுத ஆரம்பித்தால், காலமெனும் தீராநதியில் கரையொதுங்கும் நினைவுகள், வார்த்தைகளை இழுத்துக்கொண்டே செல்கிறது. எவ்வளவோ சொல்ல இருந்தாலும் எங்காவது ஒரு இடத்தில் நிறுத்தித்தானே ஆக வேண்டும்? இத்துடன் நிறுத்திக் கொள்வது, இப்போதைக்கு நல்லது எனப்படுகிறது. நன்றி!

2007: Spring, Summer, Fall, Winter… and Spring



Last year I came across a classic Korean film on this title. Just like having a fresh tea while reading newspaper in the early – rainy morning, I had a tranquil experience with the film. The story is about the relationship in-between a Zen master and his disciple. In the back drop of four different seasons in a Monastery situated in the center of a lake; with 3600 mountain range, it narrates how a normal man with very common deeds and misdeeds is transforming as an enlightened master.

Like haiku, the message from the movie is very simple and deep. All of us are crossing the four seasons every year. Most of us are doing the routine things in our every day life. We know that life is cycle and continuum. Then what makes value addition to our time? One can’t take bath twice in the same river (Lao-tzu). The life with time is such a dynamic and spontaneous. May be the seasons are same in ever year. But our experience with same season in every year is new. My experience with last year spring and this year spring is different. At the same time, in most cases, I miss to sense the changes. Even in daily prayer, just keeping me with closed eyes and looking my inner side for just about 2 - 3 min. it self is painful and not happening very naturally. My biological clock is programmed to see, which I prefer or which is directed. In these processes we seriously miss the musing message of nature. Surprisingly, I’m alienating with me! 

At least retreat like processes is helping me to re – treat the changes and developments with in me. Beyond Institutional mandate, to me, such retreat processes are refreshing and recharging the self in the given institutional environment.

1. This is me:
“Crossing half the sky, 
on my way to the capital, 
big clouds promise snow”
- Basho 

I’m native of Triuttani (approximately 70 KM away from this retreat centre), presently working in Panchayat theme, central office and associating with Tata – Dhan Academy (TDA) in its academic services. My father was a banker, mother is homemaker and younger brother is lawyer. This January, I got married (from then, I loosed my bachelor’s position; she became my master), started my family in Madurai. All my family members have given freedom and holds great trust on me. this regulates me to be more responsible to them.

After finishing my Pharmacy graduation, I had my PG in Public administration. Mean while I also attempted for civil services examinations (CSE). Even though I could not succeed with CSE, with those preparations I gained wider exposure in multiple subjects and it tuned my learning attitude in to higher levels. Then I went through Program in Development Management at TDA. In my 20 years of academic journey, the TDA life is greatly impacted me in terms of building confidence, diversifying my perspectives and looking things laterally.

The prime reason for me to find in DHAN is its professionalism, cordial peer group and the culture with which the space for learning well rooted. Of course, my interest in public services also played role to be here. With my six years of association with DHAN, I could feel that, my understanding related with development sector is reached some leaps and bounce. My motivation level in democratic governance and Panchayat sector were significantly improved. I could gain strong perspective with Panchayat theme. Apart from my readings and references, my discussion with senior colleagues of DHAN (especially with my program leader Mr. Singarayar, Mr. Vallnayagam and our E.D) enforces crosscuts in my assumptions and perspectives.

2. Retreating about Program Activities:

“Those falling blossoms
all return to the branch when
I watch butterflies”
- Moritake

This year I had different kind of experience by associating with several responsibilities. With Panchayat theme, my major responsibility is shifted to program activities and sectoral operations.
          
Beyond the field activities my involvement and contribution with respect to regularizing the intra program communications, working for “Panchayattu thoodhu” (our theme’s news letter), contact building with external institutions, planning and execution of program trainings (EDP, Panchayat Functionaries, training to Panchayat representatives), Symposium event and documentation, Updating the sectoral knowledge, value adding our program components - IMPACTS (Institution building, Micro planning and implementation, Poverty reduction, Advocacy for policy changes, Capacity building, Transparent governance and Self – sufficiency) and positioning the C – PAD (Center for Panchayat Affairs and Development) are some of the important areas flashing in my mind, at this point of time. Most important thing is that, all these efforts were not just one man show. The team involvement and support from my program leader is very significant to execute my roles.

During the past five years, the relationship with my program leader, Singarayar sir is key element to unleash my ability. The existence of a sort of Guru – Sishya relationship in-between us is helped me a lot. His collegiality and freedom created space for self – learning with in me. In many occasions, his bare foot experience with the community and development sector is sourcing energy in to me. Both in my official and personal affairs, I faith his suggestions and value it. Apart from this, as for as Panchayat team concern, I have acute disappointment.
           
The association with Tata Dhan Academy as faculty is very different experience. It is interesting that, I’m teaching in the same institution, where I have studied. But metamorphosis of a field person to an academician demands serious and continuous attempts (In TDA, we need to balance the both thing too). Performing the role of faculty is not just about delivering a series of lectures; more than that it is related with facilitating learning process to the students, pinching at high standards to match with other faculty members, branding TDA as center of excellence and lot more. The academy experience and interactions with peer faculty, sculptures my thought process and makes enjoyable with my role. Beyond the class room sessions, I have taken up the responsibility of “TDA Alumni Association” coordination. The alumni association just exists in the virtual mode. My concern is to build “SPARK” (Standardization, Participation, Activation, Realization and Keep – tracking) among alumni. It needs consultation and active support from our E.D, TDA Director and my alumni - friends. Considering the increase number of alumni, growing demand, new campus initiation and other related matters, in the coming year I think, streangtning the alumni will be one of my priority tasks. 

Apart from these activities, with people academy, working for Diploma in Panchayat Management – course content refinement and facilitating seminar classes are very memorable. This year with the support and motivation of Sivakumar (CDC) I have introduced with development journalism. These days I have initiated to write in the editorial pages in the Janasakthi newspaper. Writing in media is helping me to synthesis my understanding and obviously, it vitalizes my writing skill.    

3. Retreating about Organization:

Singing, planting rice, 
  village songs more lovely 
than famous city poems
- Basho 

I was amazed and feel proud about DHAN Foundation’s decadal growth and impact. Its diversification, reach and scale were great. It is touching all most all the contemporary development themes. At this point of time, I’m remembering the philosophy of “Growth brings Quality” coined by our E.D some two years back. Yes. There is no second doubt in our growth and contribution to the society and sector. But as a learning organization, internally we also need to re – treat our self to keep our standards. I don’t know is it right forum or am I right person to spell out the gray areas (In my personally perception). But I feel that, retreating myself is includes my organization and my relationship with that. I could see some five trends with in our organization, which may pull down our virtue in long run.

¨            People are becoming as task managers: These days I could observe, increasingly people are treating it as regular job, with out putting their heart in their roles. Several colleagues are doing things, which is directed or suggested by their respective heads. Very rare innovations and self – initiatives from the younger colleagues are coming up.    

¨            Drain of trigger: These days, the space and time availability for younger colleagues to interact with seniors is reducing. Because of this the development orientation and emotional trigger, which is crucial for shaping younger colleagues are getting drained. Of course people have options to relate with next level senior staff, but the intensity and impact will not be as same as expected.       

¨            Working with Comparative excellence: In most conditions we are operating in comparative excellence. We are the best among other development players in the contemporary arena. But are we concern about our own absolute excellence? Every one of us needs to retreat on this.    

¨            Performance assessment tools: I feel the assessment of individual performance (the annual performance enabling program or appraisal) need more trigger and scientific. So far, except my first appraisal event, I never had any value addition or impact over the appraisal processes. Even for the last appraisal event, I had just 25 min. (20 min. in peer group + 5 min. in panel) to evaluate about my one year work and till date I never received any feedback from HRD. Unfortunately such inconsistency creates less hope on those processes.

¨            Hesitations for taking responsibilities: These days voluntarism for taking responsibilities, performing multiple roles are less prioritized by our colleagues. Even for facilitating daily prayer (in central office) people are not coming forward. Such hiding back attitudes never help us to excel in our purposes.  

May be these are not outcomes but these are indicators (and all are inter – linked) which need to be validated by all of us. The responsibility of keeping our standards is the responsibility of us. Of course, we have several great souls with us in all levels, who put their heart and blood for the development of our institution. At the same time, we also need to look neutrally of our activities to renew our selves at least to value them.     

4. Retreating about Self:

A single yam leaf
contains the entire life
of a water drop
- Kikaku

The days of 2007 is filled with pleasant memories. In terms of learning opportunities, relationship with peer members, task accomplishment, self satisfaction, peace in family front all are blessed well to me. But I need to gear-up my contributions, especially in the field activities and in academic initiatives. I think the coming year will be grateful to provide such opportunities. The only and prime concern which is increasingly disturbing is my financial condition. After the retirement of my father by July’ 2007, the family responsibilities were pressurizing me. Being away from my native for the past six plus years is disturbing some times. I’m trying to balance the things. But to me, it is always easy to writing a solution in paper than to practice it. We are happy by limiting our desires but not through achieving it; is it so?                 

5. The next spring…

First cherry blossoms,
a cuckoo, the moon and snow:
another year closes
-       Sanpu

Time is highly volatile element. With my limited life experience, I get convinced in two things. Surrendering with the nature and keeping the mind empty. James Allen use to say, nature is retreating and renewing itself. A tree flourishes; falls; meditates and rejuvenates very naturally. Regeneration will happen with “conscious saranaagathi” with the nature. As said by Picasso, “the best work is not yet started; the master piece rests in the next work”, the attitude of doing better than my best is my second learning. The beauty of life is in its suspense. Let’s expect, except expect!

These days, need is not the mother of invention; Invention is the mother of need! What ever idiotic thing got invented, by marketing techniques the corporate are creating the need. Our consumerism reaches to the height of universe. In this condition constructing a society with alternative value system needs synergic and continuous action. The challenge ahead is bigger than our imagination. Let’s hope the next spring will enrich me with greater and significant contributions to society, institution, family and self.